நவாஸ் ஷெரீஃபுக்கு தீவிர சிகிச்சை தேவை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாஸ் ஷெரீஃபின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் அவரை உடனடியாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாஸ் ஷெரீஃபின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் அவரை உடனடியாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இருதய நோய் மருத்துவ நிபுணர் அட்னன் கான் கூறியதாவது:
நவாஸ் ஷெரீஃபின் இருதய நோய் மிகவும் தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக அவரது உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது.
சிறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது. எனவே, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நவாஸ் ஷெரீஃபை பரிசோதித்த சிறப்பு மருத்துவக் குழு, அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளது. எனினும், அந்தப் பரிந்துரையை அரசு செவிமடுக்கவில்லை என்றார் அவர்.
அல்-அஜீஸா இரும்பாலை முறைகேடு வழக்கில் நவாஸுக்கு கடந்த மாதம் 24-ஆம் தேதி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து, அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, லாகூரிலுள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிறைச் சாலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், நவாஸ் ஷெரீஃபின் உடல் நிலையில் பல குறைபாடுகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதையடுத்து, அவர் லாகூரிலுள்ள பஞ்சாப் இருதய நோய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (பிஐசி) செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அங்கு பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், அவரது மருத்துவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.