கரோனா நோயாளிகள் இருக்கும் அறையின் காற்றிலும், தரையிலும் கரோனா தொற்றுகள்: ஆய்வு
கரோனா நோயாளிகள் இருக்கும் மருத்துவமனை வார்டுகளில் இருந்து எடுக்கப்பட்ட காற்று மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், கரோனா நோயாளி இருக்கும் இடத்தில் இருந்து
உலகம்கரோனா நோயாளிகள் இருக்கும் அறையின் காற்றிலும், தரையிலும் கரோனா தொற்றுகள்: ஆய்வு
கரோனா நோயாளிகள் இருக்கும் மருத்துவமனை வார்டுகளில் இருந்து எடுக்கப்பட்ட காற்று மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், கரோனா நோயாளி இருக்கும் இடத்தில் இருந்து
வாஷிங்டன்: கரோனா நோயாளிகள் இருக்கும் மருத்துவமனை வார்டுகளில் இருந்து எடுக்கப்பட்ட காற்று மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், கரோனா நோயாளி இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 13 அடி (4 மீட்டர்) தூரம் வரையிலான காற்றில் கூட கரோனா கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போது சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அரசுகள் கூறும் இடைவெளியை விட, அதிக தூரத்துக்கு கரோனா தொற்று பயணிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
சீன ஆராய்ச்சியாளர்கள் கரோனா தொற்று குறித்து நடத்தி வரும் ஆராய்ச்சியின் ஆரம்பக்கட்ட முடிவுகள், அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் இதழில் வெளியாகியுள்ளது.
பெய்ஜிங்கின் ராணுவ மருத்துவ அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆய்வில், வூஹானில் உள்ள மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அறையின் காற்று மற்றும் சுவர், தரைப் பகுதிகளையும் ஆய்வு செய்தனர். பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை சுமார் 24 நோயாளிகள் இந்த சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த சிறப்பு வார்டில் தரைப் பகுதிகளில் ஏராளமான கரோனா தொற்றுகள் இருந்தது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. புவிஈர்ப்பு சக்தி மற்றும் நோயாளிகள் இருமல் மற்றும் தும்மலின் போது வெளியேறும் நீர்த்திவலைகள் மூலம் தரைப் பகுதியில் ஏராளமான கரோனா தொற்றுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அதிகம் பேரால் தொடும் பொருட்கள் மீதும் கரோனா தொற்று அதகமாக இருந்தது, உதாரணமாக கணினியின் மவுஸ், குப்பைத் தொட்டி, கதவுகளின் கைப்பிடி போன்றவற்றில் கரோனா தொற்று அதிகமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் காலணிகளின் அடிப்பகுதியில் ஏராளமான கரோனா தொற்றுகள் இருந்ததும் தெரிய வந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், மருத்துவப் பணியாளர்களின் காலணிகளின் அடிப்பாகம்தான், பெரிய அளவில் கரோனா தொற்றைக் கடத்திச் செல்லும் காரணிகளாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், நோயாளிகளின் இருமல், தும்மல் மூலம் கற்றில் தெறிக்கும் கரோனா தொற்றுகள் பல மணி நேரம் காற்றில் இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது. இதன்படி, ஒரு நோயாளி இருக்கும் இடத்தில் இருந்து 13 அடி வரையிலான காற்றில் கரோனா தொற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கரோனா அறிகுறி இருப்பவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைப்பது என்பது அவ்வளவு சிறந்த விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிய வந்துள்ளது.