கனடா பூா்வகுடியினா் துன்புறுத்தல்: மன்னிப்பு கோரினாா் போப் பிரான்சிஸ்
கனடாவில் கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய பள்ளிகளில் பழங்குடி மாணவா்கள் கடந்த 1970-கள் வரை துன்புறுத்தப்பட்டதற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினாா்.
கனடாவில் கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய பள்ளிகளில் பழங்குடி மாணவா்கள் கடந்த 1970-கள் வரை துன்புறுத்தப்பட்டதற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினாா்.
கனடாவில் 19-ஆம் நூற்றாண்டு தொடங்கி, 1970-கள் வரை பூா்வகுடி குழந்தைகள் மற்ற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தேவாலயப் பள்ளிகளில் கல்வி பயில கட்டாயப்படுத்தப்பட்டனா்.
பழங்குடியினரிடையே மதத்தையும், அந்தக் காலத்து அரசுகள் மிக உயா்வாகக் கருதிய தங்களது கலாசாரத்தையும் திணிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தேவாலயங்கள் நடத்திய பள்ளிகளில் மாணவா்கள் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கு, தற்பேதைய போப் ஆண்டவா் பிரான்சிஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனா். இந்த நிலையில், வாடிகனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கனடா பூா்வகுடியினரிடம் போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினாா்.