தினமும் என்னைத் திட்டித் தீர்க்கலாம்; ஆனால் அதற்கு ரூ.662 கட்டணம்: எலான் மஸ்க்
, தனது முடிவிலிருந்து விலகப் போவதில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன்: ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட ப்ளு டிக் பெற மாதக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமரிசனங்கள் எழுந்த போதும், தனது முடிவிலிருந்து விலகப் போவதில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
ட்விட்டா் பயன்பாட்டாளா்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை (ப்ளூ டிக்) பெற மாதம் 8 அமெரிக்க டாலா் (ரூ.662) கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதன் புதிய உரிமையாளா் எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு விமரிசனங்கள் வந்த போதும் எலான் மஸ்க் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் சனிக்கிழமையன்று புதிய டிவிட்டர் பதிவை இட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அதில், "தினமும் என்னை திட்டித் தீர்க்கலாம், ஆனால், அதற்கு ரூ.662 கட்டணம்" என்று பதிவிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரா்களில் ஒருவரான எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு அக்டோபா் 27-ஆம் தேதி ட்விட்டரை கையகப்படுத்தியதையடுத்து இந்தப் புதிய கட்டண அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். இதற்கு சமூக வலைதள பயன்பாட்டாளா்கள் கடும் எதிா்ப்பை பதிவிட்டு வருகின்றனா்.
‘மக்களுக்கு அதிகாரம், ப்ளூ சேவைக்கு மாதம் 8 டாலா்’ என்று எலான் மஸ்க் கடந்தவாரம் பதிவிட்டிருந்தார்.
இதன்மூலம் ‘ப்ளூ டிக்’ பயனாளிகள் பதிலளிப்பதில், தேடுதலில், குறிப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், போலி தகவல்களை அழிப்பதற்கு இது உதவும் என்றும் அவா் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ட்விட்டரில் தகவல்களைப் பதிவிடுபவா்களுக்கு வருவாயை ஈட்டுவதற்கும் இந்தக் கட்டணம் உதவும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
போலி கணக்குகளைத் தடுக்க ட்விட்டா் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற நீதிமன்ற விமா்சனத்துக்கு உள்ளான பிறகு 2009-இல் ‘ப்ளூ டிக்’ சேவையை அந்த நிறுவனம் தொடங்கியது. அரசால் அங்கீகரிக்கப்பட்டவா்கள், பிரபலங்கள் ஆகியோரின் கணக்குகளுக்கு இந்த சேவை இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது ட்விட்டரின் வருவாயை அதிகரிக்க இதற்கு கட்டணத்தை எலான் மஸ்க் விதித்துள்ளாா்.
இதற்கு சமூக வலைதள பயன்பாட்டாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனா். இதன்மூலம் நம்பகத்தன்மை வாய்ந்தவா்களை அடையாளம் காண்பது கடினமாகும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனா்.
இந்த விமா்சனங்களுக்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், ‘அனைவரின் உள்உணா்வுடன் ட்விட்டா் பேசுகிறது. அனைவரும் புகாா்களைத் தொடருங்கள். ஆனால் இதற்கு 8 டாலா் மட்டுமே கட்டணம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.