முகப்பு
உலகம்

காஸா: ஐ.நா.வின் 11 ஊழியர்கள், 30 மாணவர்கள் பலி

காஸாவில் ஹமாஸ் படையின் தாக்குதலில் 11 ஐ.நா ஊழியர்கள் மற்றும் 30 ஐ.நா.வின் பள்ளி மாணவர்கள் பலியானதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

Updated On : 12 அக்டோபர் 2023, 10:55 am IST
கோப்புப்படம்
பகிர்:

டெல் அவிவ்: காஸாவில் ஹமாஸ் படையின் தாக்குதலில் 11 ஐ.நா ஊழியர்கள் மற்றும் 30 ஐ.நா.வின் பள்ளி மாணவர்கள் பலியானதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினா் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா்.

அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக 22 இடங்களில் ஊடுருவிய சுமாா் 1,000 ஹமாஸ் அமைப்பினா், சுமாா் 25 கி.மீ. வரை உள்ளே நுழைந்து பொதுமக்களையும், ராணுவத்தினரையும் சுட்டுக் கொன்றனா். இது தவிர, பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் என பலரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

Advertisement

Advertisement

இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 5 நாள்களாக காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், மக்கள் மிக நெருக்கமாக வசிக்கும் அந்த மிகச் சிறிய பகுதிக்கு மின்சார விநியோகத்தைத் துண்டித்த இஸ்ரேல் அரசு, உணவு, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல முடியாத வகையில் அந்தப் பகுதியை முற்றுகையிட்டது.

ஏற்கெனவே, இஸ்ரேலின் கடுமையான விமானத் தாக்குதலால் காஸாவின் பல்வேறு பகுதிகள் தரைமட்டமாகி வருகின்றன.

மேலும், இந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா். பல்லாயிரக்கணக்கானவா்கள் காயமடைந்துள்ளனா்.

இந்தச் சூழலில், ஹமாஸ் குழுவினா் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 11 ஐ.நா ஊழியர்கள் மற்றும் 30 ஐ.நா பள்ளி மாணவர்கள் காஸா பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.நா நிவாரண மற்றும் பணி முகமை சேர்ந்த 11 ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் நடத்தப்படும் பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. பள்ளி மாணவர்கள் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார். 

காயமடைந்தவர்களில் 5 ஆசிரியர்கள், 1 மகப்பேறு மருத்துவர், 1 பொறியாளர், 1 ஆலோசகர் மற்றும் 3 உதவியாளர்கள் என்று துணை இயக்குநர் ஜெனிபர் ஆஸ்டின் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காஸாவில் 2,50,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. 

இருப்பினும், இவர்களில் பெரும்பாலோர் பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா ஏஜென்சியால் நடத்தப்படும் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர் என்று தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.