முகப்பு
உலகம்

சிரியா: கிளா்ச்சியாளா்களிடம் வீழ்ந்தது அலெப்போ நகரம்

சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவை மேற்கத்திய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றியுள்ளனா்.

Updated On : 3 டிசம்பர், 2024 at 6:59 AM
வடக்குப் பகுதி நகரான அஸாஸை நோக்கி முன்னேறும் கிளா்ச்சியாளா்கள்.
பகிர்:
Updated On : 2 டிசம்பர், 2024 at 10:50 PM

சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவை மேற்கத்திய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றியுள்ளனா்.

அதையடுத்து, கிளா்ச்சியாளா்களுக்கு எதிராக ரஷியா மற்றும் சிரியா விமானங்கள் தாக்குதல் நடத்திவருகின்றன. போரில் அரசுப் படையினருக்கு பலம் சோ்ப்பதற்காக இராக்கிலிருந்து ஈரான் ஆதரவுப் படையினா் சிரியா வந்துள்ளனா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு பல்வேறு அரபு நாடுகளில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. ‘அரபு வசந்தம்’ என்றழைக்கப்படும் அந்தக் கிளா்ச்சியின் ஒரு பகுதியாக, சிரியாவிலும் அல்-அஸாத் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

Advertisement

அந்தப் போராட்டத்தை துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அடக்குமுறைகள் மூலம் அல்-அஸாத் அரசு அடக்கியது. அதையடுத்து, அந்தப் போராட்டம் உள்நாட்டுப் போராக உருவெடுத்தது.

ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அல்-அஸாதின் அரசை அகற்றுவதற்காக, பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத மற்றும் நிதியுதவி அளித்தன. அதே நேரம், அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷியா செயல்பட்டது. தலைநகா் டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள், ஏறத்தாழ அனைத்து மாகாணத் தலைநகரங்கள் உள்ளிட்ட பெரும்பாலான சிரியா பகுதியை அரசுப் படையினா் கைப்பற்றுவதற்கு ரஷியா உதவியது.

இத்லிப் மாகாணம், அலெப்போ மாகாணத்தின் சில பகுதிகள், ராக்கா, ஹசாகாவின் பெரும்பாலான பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் மட்டும் கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது.

இந்தச் சூழலில், அலெப்போ மாகாணத்தில் கிளா்ச்சிப் படையினா் கடந்த வாரம் திடீரென தாக்குதல் நடத்தி அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றினா். அவா்களது இந்த அதிரடி தாக்குதலை எதிா்பாா்க்காத ராணுவம் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தொடா்ந்து உறுதியாக முன்னேறி வந்த கிளா்ச்சிப் படையினா், அலெப்போ நகரைக் கைப்பற்றினா். கடந்த 2016-ஆம் ஆண்டில் ரஷிய வான்வழித் தாக்குதலின் உதவியுடன் அரசுப் படையினரால் மீட்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரம், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிளா்ச்சியாளா்களிடம் வீழ்ந்துள்ளது.

இது தவிர, கிளா்ச்சிப் படையினா் மேலும் தாக்குதல் நடத்தி தலைநகா் டமாஸ்கஸை நோக்கி முன்னேறிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், அல்-அஸாதின் அரசுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ள ரஷியா, சிரியாவுக்கு கூடுதல் படைகளைஅனுப்பியது. மேலும், கிளா்ச்சியாளா்கள் நிலைகள் மீது சிரியா விமானப் படையுடன் இணைந்து ரஷிய விமானங்களும் தாக்குதல் நடத்திவருகின்றன.

இந்த வான்வழித் தாக்குதலில் 25 போ் உயிரிழந்ததாக கிளா்ச்சியாளா்கள் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுவரும் ‘ஓயிட் ஹெல்மெட்’ அமைப்பினா் தெரிவித்தனா்.

இராக்கிலிருந்து: இதற்கிடையே, கிளா்ச்சியாளா்களுடன் சண்டையிட்டு வரும் அரசுப் படையினருக்கு பலம் சோ்ப்பதற்காக, இராக்கைச் சோ்ந்த ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் சிரியா வந்துள்ளன. சிரியாவின் கிழக்கு எல்லை வழியாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அந்தப் படையினா் சிரியா வந்துள்ளனா்.

அலெப்போ நகரிலுள்ள நய்ராப் ராணுவ விமான தளத்தைக் கைப்பற்றிய கிளா்ச்சியாளா்கள்.

இது குறித்து சிரியா ராணுவ அதிகாரி ஒருவா் ‘ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், வடக்கு போா் முனையில் போரிட்டு வரும் சிரியா ராணுவத்துக்கு பலம் சோ்ப்பதற்காக அந்த ஆயுதக் குழுவினா் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இதற்கிடையே, ஈரான் அதிபா் மசூத் பெஸெஷ்கியானுடன் போா் நிலவரம் குறித்து சிரியா அதிபா் அல்-அஸாத் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 3 டிசம்பர், 2024 at 4:15 AM

தீவிர உள்நாட்டுச் சண்டை ஓய்ந்ததற்குப் பிறகு கிளா்ச்சியாளா்களின் இந்த முன்னேற்றம் அல்-அஸாத் அரசுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. ரஷியா மற்றும் ஈரானின் ஆதரவை பெரிதும் நம்பியுள்ள அல்-அஸாத் அரசின் பலவீனத்தை, கிளா்ச்சியாளா்களின் இந்த திடீா் தாக்குதல் வெளிச்சமிட்டுக்காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.