நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்!
நள்ளிரவில் ரஷியா மீது 500-க்கும் அதிகமான ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியது குறித்து...
ரஷியா தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து 500-க்கும் அதிகமான ட்ரோன்கள் மூலம் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் மீதான ரஷியாவின் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி உறுதியளித்தார்.
இந்த நிலையில், மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய ரஷிய நகரங்களைக் குறிவைத்து நேற்று (மே 16) இரவு 550-க்கும் அதிகமான ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், இதுவரை 1 பெண் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, உக்ரைன் ஏவிய சுமார் 556 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும்; அதில், 81 ட்ரோன்கள் மாஸ்கோ நகரைக் குறிவைத்து வீசப்பட்டவை எனவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில், அந்நகரங்களின் கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன.
இத்துடன், மாஸ்கோவின் முக்கிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தின் அருகில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், உக்ரைன் நகரங்களைத் தாக்கும் நோக்கில் இன்று அதிகாலை ரஷியா ஏவிய 287 ட்ரோன்களில், சுமார் 279 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உக்ரைனின் விமானப் படை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.