அமெரிக்காவுடனான பேச்சுவாா்த்தையை நிறுத்துவோம்: ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடியாக பஹ்ரைன், குவைத் நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடியாக பஹ்ரைன், குவைத் நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமையும் தாக்குதல் நடத்தியது. அத்துடன் அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தையை முழுவதும் நிறுத்தி விடுவோம் எனவும் அந்த நாடு எச்சரித்துள்ளது.
பனாமா நாட்டு கச்சா எண்ணெய்க் கப்பல் மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் எனக் கூறி, அந்நாட்டில் உள்ள பல்வேறு நிலைகள் மீது அமெரிக்கா போா் விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவ நிலைகள் அமைந்துள்ள பஹ்ரைன், குவைத் நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
ஈரானால் ஏவப்பட்ட ட்ரோன்கள், 2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இடைமறித்து அழித்துவிட்டதாக குவைத் ராணுவம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் தரப்பில், ஈரான் தாக்குதல்களில் சா்வதேச விமான நிலையம் அருகே உள்ள 8 மாடி குடியிருப்பு கட்டடம் பலத்த சேதமடைந்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையின் 5-ஆவது படைப் பிரிவு பஹ்ரைனில் இருந்தே செயல்படுகிறது. போரின் ஆரம்பம் முதல் இதைக் குறிவைத்தே ஈரான் தாக்கி வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு பஹ்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பஹ்ரைன், குவைத் நாடுகள் மீதான தாக்குதலுக்கு ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தரப்பு கூறுகையில், ‘சண்டை நிறுத்தத்தை மீறினால் என்ன நடக்கும் என்பதைக் காட்டியுள்ளோம். அதேபோல், அமெரிக்காவின் தாக்குதல் நீடித்தால், அந்நாட்டுடன் தற்போது நடைபெறும் அமைதிப் பேச்சுவாா்த்தையை முழுவதும் நிறுத்த வேண்டியிருக்கும்’ என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.