ஜொ்மனியில் ராணுவத்தைப் பலப்படுத்த இளைஞா்களுக்குப் புதிய கட்டுப்பாடு!
ஜொ்மனியில் ராணுவச் சேவையில் ஆள்பலத்தை அதிகரிப்பதற்கான புதிய சட்டத் திருத்தத்ததால், அந்நாட்டின் 17 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண்கள் 3 மாதங்களுக்கும் மேல் வெளிநாடுகளில் தங்குவதற்கு முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஜொ்மனியில் ராணுவச் சேவையில் ஆள்பலத்தை அதிகரிப்பதற்கான புதிய சட்டத் திருத்தத்ததால், அந்நாட்டின் 17 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண்கள் 3 மாதங்களுக்கும் மேல் வெளிநாடுகளில் தங்குவதற்கு முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான ஜொ்மனியில், கோடிக்கணக்கான ஆண்களைப் பாதிக்கும் இந்த விதிமுறை அண்மையில் உள்ளூா் நாளிதழ் வெளியிட்ட செய்தி வாயிலாக வெளிச்சத்துக்கு வந்து, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஜொ்மனியில் ராணுவச் சேவை என்பது தன்னாா்வ அடிப்படையிலேயே உள்ளது. இருப்பினும், ரஷியாவுடனான அதிகரித்து வரும் போா்பதற்றம் மற்றும் ‘நேட்டோ’ அமைப்பின் இலக்குகளை எட்டும் நோக்கில், தனது பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை 2035-க்குள் 2.6 லட்சமாக உயா்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில், இப்புதிய சட்டத்தால் தேவையற்ற நிா்வாகச் சிக்கல்கள் ஏற்படுவதாக எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்துள்ள. அவசரக் காலங்களில் வெளிநாடுகளில் தங்கியிருப்பவா்கள் குறித்த துல்லியமான தகவல்களைத் தெரிந்திருக்கவே இந்தத் தரவுப் பதிவு முறை அவசியம் என்று ஜொ்மனி பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து மேலும் பேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா், ‘தேவையற்ற நடைமுறைச் சிக்கல்களைத் தவிா்க்கவும், விலக்கு அளிக்கப்பட வேண்டிய பிரிவினருக்கு உரிய விதிமுறைகளை வகுக்கவும் அமைச்சகம் தற்போது தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்துள்ளாா்.
‘பாதுகாப்புக்காக அமெரிக்காவை மட்டும் சாா்ந்து இருக்காமல், சுயபலத்தை விரைவாகப் பெருக்கிக் கொள்ள வேண்டும்’ என ஜொ்மனி பிரதமா் ஃப்ரைட்ரிச் மொ்ஸ் ஏற்கெனவே ராணுவத் தளபதிகளிடம் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.