குரானை காலால் மிதித்த விடியோ வைரல்: 2 பெண்கள் கைது!
இந்தோனேசியாவில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை காலால் மிதித்து விடியோ பதிவுசெய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தோனேசியாவில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை காலால் மிதித்து விடியோ பதிவுசெய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தோனேசியாவின் பாண்டென் நகரிலுள்ள லெபாக் பகுதியில் பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வரும் பெண்மணி, தனது கடைக்கு வந்த வாடிக்கையாளர் அங்குள்ளப் பொருளைத் திருடியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
வாடிக்கையாளராக வந்த பெண் அதனை மறுக்கவே அவரை இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் மீது ஏறி நின்று சத்தியம் செய்ய வற்புறுத்திய கடை உரிமையாளர் அதனை விடியோ எடுத்துள்ளார்.
Advertisement
அவர் எடுத்த விடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல வைரலானதைத் தொடர்ந்து பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குரான் மீது ஏறி நின்ற பெண்ணும், அவரை நிற்கச் சொன்ன பெண்ணும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணமானால் அவர்கள் இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இந்தோனேசியாவில் 24 கோடிக்கும் மேலான இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். இது உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடாக உள்ளது.
அங்குள்ள ஆறு அதிகாரப்பூர்வ மதங்களில் ஏதேனும் ஒன்றைப் புண்படுத்தும் வகையிலான கருத்துகளை வெளியிடுவதோ அல்லது ஒருவர் அந்த மதங்களில் ஒன்றைப் பின்பற்றுவதைத் தடுப்பதையோ சட்டம் தடை செய்கிறது.
இந்த நிலையில், இந்தோனேசியாவில் உள்ள மத சிறுபான்மையினரைக் குறிவைத்து மத நிந்தனைச் சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக அங்குள்ள அமைப்புகள் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, ஜகார்த்தா பகுதி முன்னாள் ஆளுநரான அஹோக் கடந்த 2017-ல் மத நிந்தனை குற்றச்சாட்டில் இரு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்திருந்தார்.
அதேபோல, 2024-ல் நகைச்சுவைப் பேச்சாளர் ஒருவர் நபிகளின் பெயரில் ஜோக் செய்ததாகக் கூறி 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.