ஈரானுக்கு சீனா அளித்த ‘பரிசை’ கைப்பற்றியது அமெரிக்கா! எதைச் சொல்கிறார் டிரம்ப்?
ஈரானுக்கு சீனா அளித்த ‘பரிசை’ அமெரிக்கா கைப்பற்றியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளதைப் பற்றி...
ஈரானுக்கு சீனா அளித்த ‘பரிசை’ அமெரிக்கா கைப்பற்றியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று காலை அறிவித்திருந்த நிலையில், ஈரானின் சீனா அளித்த பரிசு ஒன்றை அமெரிக்க ராணுவம் கைப்பற்றியிருப்பதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், “சீனாவிலிருந்து வந்த படகு ஒன்றை அமெரிக்க ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இது சீனாவிலிருந்து ஈரானுக்கு கொண்டுவரப்பட்ட பரிசாகக்கூட இருக்கலாம். நேற்று நாங்கள் ஒரு கப்பலைப் பிடித்தோம். அதில் சில பொருள்கள் இருந்தன.
Advertisement
Advertisement
அந்தக் கப்பல் ஒன்றும் நன்றாக இல்லை. ஒருவேளை சீனாவிலிருந்து வந்த பரிசாக இருக்கலாம், எனக்குத் தெரியாது. நான் அதிபர் ஷிங் பிங்குடன் ஒரு நட்புறவு வைத்திருப்பதாக நினைத்தேன். ஆனால், பரவாயில்லை. போர் என்றால் அப்படித்தான் இருக்கும்?” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், ஈரானுக்கு ஏவுகணைகள் தயாரிக்க வெடிமருந்துகள் கொடுத்து சீனா உதவுவதாகவும் தகவல்கள் வெளியாகிருந்தன.
இதனை முற்றிலுமாக மறுத்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் பேசுகையில், “எனக்குத் தெரிந்தவரை, அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட கப்பல் ஒரு வெளிநாட்டுக் கப்பலாக இருக்கலாம். அந்தக் கப்பலுக்கும் சீனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, புவியின் சுற்றுவட்டப்பாதையின் சுற்றிக் கொண்டிருக்கும் சீனாவில் தயாரிக்கப்பட்ட டிஇஇ-01பி (TEE-01B) என்ற உளவு செயற்கைக்கோளை, ஈரானின் புரட்சிக்கர காவல்படையினர் ரகசியமாகப் பெற்று அமெரிக்காவின் ராணுவத் தளங்களைக் கண்காணித்து ஈரான் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த செயற்கைக்கோளானது சீனாவில் எர்த் ஐ என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அதே நிறுவனம் விண்ணில் நிலைநிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சுற்றுவட்டப்பாதையில் விநியோகிக்கப்படும் (in-orbit delivery) இந்த செயற்கைக்கோள்கள், ஏவப்பட்டு, விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பின்னரே வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. தகவல்களின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவத் தளவாடங்களை கண்காணிக்கும் பொறுப்பை இந்த செயற்கைக்கோள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மார்ச் 13, 14, 15 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமான தளத்தை, இந்த செயற்கைக்கோள் உளவு பார்த்து படமெடுத்தாகவும், அதேநேரம் மார்ச் 14 ஆம் தேதி சௌதியில் உள்ள அமெரிக்க விமான தளவாடங்களில் நிறுத்தப்பட்டிருந்த போர் விமானங்களை ஈரான் தாக்கி அழித்ததாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
சௌதி மட்டுமின்றி, ஜோர்டானின் முவாஃப்பக் சால்டி விமானப்படைத் தளம், மனாமாவில் உள்ள அமெரிக்காவின் கடற்படைத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள இடங்கள், பஹ்ரைன், எர்பில் விமான நிலையம், இராக்கிலும் தாக்குதல்கள் நடத்துவதற்காக இந்தச் செயற்கைக்கோள் படமெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானுக்கும் சீனாவுக்கும் நேரடி தொடர்புள்ளதாக என்ற சந்தேகத்துக்கு மத்தியில், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டாங் ஜு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், ஈரானுக்கு நாங்கள் ராணுவ உதவி எதுவும் செய்யவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
ஈரானுக்கு நீண்டகாலமாகவே, தொலைதூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சீனா வழங்கி வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தம் நிரந்தரமாகவும் சுமுகமாகவும் தொடரும் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில், ஈரானுக்கு சீனாவின் பரிசைக் கைப்பற்றியதாக அதிபர் டிரம்ப் சூசகமாகத் தெரிவித்திருப்பது உலகளவில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்திருக்கின்றன.
President Donald Trump made cryptic comments Tuesday about China possibly providing weapons or other potentially lethal war supplies to Iran, a move that would test a US red line on aiding Tehran during the war.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.