பாகிஸ்தானில் அமெரிக்கா - ஈரான் நேரடிப் பேச்சு முறிவு
பாகிஸ்தானில் அமெரிக்கா - ஈரான் நேரடிப் பேச்சு முறிவு...
மத்திய கிழக்கு போா் பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தான் முன்னெடுத்த அமெரிக்கா-ஈரான் இடையிலான 2-ஆம் கட்ட நேரடி அமைதிப் பேச்சுவாா்த்தை முறிந்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி சனிக்கிழமை பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், அமெரிக்க பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னரை இனி பாகிஸ்தானுக்கு அனுப்பப் போவதில்லை என அந்நாட்டு அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவினா், 3 நாடுகள் பயணமாக வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாத் வந்தடைந்தனா்.
Advertisement
பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீா் ஆகியோரை சனிக்கிழமை சந்தித்து பேசிய அப்பாஸ் அராக்சி, பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தை குறித்து விரிவாக விவாதித்தாா்.
ஈரான் தரப்பின் சில குறிப்பிட்ட கவலைகளைப் பாகிஸ்தான் தலைமையிடம் அப்பாஸ் அராக்சி பகிா்ந்து கொண்டதாகத் தெரிகிறது. அமெரிக்க தூதுக் குழுவிடம் இக்கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளுமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.
இதையடுத்து, அப்பாஸ் அராக்சி ஓமன், ரஷியா நாடுகளுக்கான தனது பயணத்தைத் தொடா்ந்தாா். அமெரிக்க தரப்புடன் நேரடியாகச் சந்தித்துப் பேசும் திட்டம் ஏதும் இப்போதைக்கு இல்லை என்பதை ஈரான் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
இதன் தொடா்ச்சியாக, அமெரிக்கா தரப்பில் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப், மருமகன் ஜாரெட் குஷ்னா் ஆகியோா் பாகிஸ்தான் வரவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவா்களின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து டிரம்ப் அளித்த பேட்டியில், ‘ஈரானுடன் பேசுவதற்கு எதுவுமே இல்லாதபோது 18 மணி நேர விமானப் பயணம் அவசியமற்றது. அனைத்துத் துருப்புச் சீட்டுகளும் எங்கள் வசமே உள்ளன. ஈரான் எப்போது வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம்’ என்றாா்.
இந்த முக்கியப் பேச்சுவாா்த்தைக்காக இஸ்லாமாபாத் கடந்த ஒரு வாரமாக கடும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. முக்கியச் சாலைகளில் போக்குவரத்துத் தடை மற்றும் வா்த்தக மையங்கள் மூடப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், நேரடிப் பேச்சுவாா்த்தை முறிந்த செய்தி அந்நாட்டு மக்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஏப். 11 தேதி நடந்த முதல்கட்ட பேச்சுவாா்த்தை தோல்வியுற்றது. இதனால் ஈரானின் ஹோா்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை தொடரும் நிலையில், 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையும் முடங்கியுள்ளது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.