ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! டிரம்ப் எச்சரிக்கை
ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பது பற்றி...
ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மூன்று நாள்களுக்குள் வெடித்துச் சிதறக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, ஈரான் அமைதி ஒப்பந்தத்தை ஏற்க அழுத்தம் கொடுக்கும் வகையில், அந்நாட்டின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகின்றது.
Advertisement
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசியதாவது:
”ஈரானில் உள்ள எண்ணெய் குழாய்கள் ஏதேனும் ஒரு காரணத்தினால் மூடப்பட்டால் அது வெடித்துச் சிதறும். மூன்று நாள்களுக்குள் ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பு வெடித்துச் சிதறலாம்.
ஈரானால் குழாய்களில் இருந்து எண்ணெய்யைக் கொள்கலன்களிலோ அல்லது கப்பல்களிலோ நிரப்ப முடியாது. வெடித்துச் சிதறும் எண்ணெய் உள்கட்டமைப்புகளை முன்பிருந்ததை போல மீண்டும் கட்டியெழுப்பவும் முடியாது.
மிகப்பெரிய பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும். போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரான் தலைமை எங்களை அணுகலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, எவ்வித அழுத்தத்துக்கு அடிபணிந்தும் தெஹ்ரான் பேச்சுவார்த்தை நடத்தாது என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.