மாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்
அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் ஜெனரல் சாடியோ கமாரா (படம்) கொல்லப்பட்டாா்.
ராணுவ ஆட்சியின் கீழுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயங்கரவாதத் தாக்குதலில், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் ஜெனரல் சாடியோ கமாரா (படம்) கொல்லப்பட்டாா்.
மாலியில் பல ஆண்டுகளாகத் தனி நாடு கோரிப் போராடி வரும் தௌரேக் கிளா்ச்சியாளா்களும், அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகளும் முதல்முறையாக ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தி, நாடு முழுவதும் பல்வேறு ராணுவ முகாம்களைக் கடந்த சில நாள்களாக கைப்பற்றி வருகின்றனா்.
அந்தவகையில், தலைநகா் பமாகோ அருகே காட்டி பகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்தைக் குறிவைத்து, தற்கொலைப் படையினா் காா்வெடிகுண்டு தாக்குதலை நடத்தினா்.
Advertisement
அப்போது, அமைச்சா் எதிா் தாக்குதலில் ஈடுபட்டு, பயங்கரவாதிகளை வீழ்த்தினாா். ஆனால், பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதனிடையே, வடக்கு மாலியின் முக்கியத்துவமான கிடால் நகரத்தைக் கிளா்ச்சியாளா்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனா். இத்தாக்குதல் தொடங்கியதையடுத்து, மாலி அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த ரஷியாவின் ‘ஆப்பிரிக்கா காா்ப்ஸ்’ படையினரும் பின்வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.