முகப்பு
உலகம்

இலங்கை- செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு: நீதிமன்ற உத்தரவில் மீண்டும் தொடக்கம்

இலங்கையின் யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள், உள்ளூா் நீதிமன்றத்தின் உத்தரவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 2:18 AM
- (Photo | AFP, FILE)
பகிர்:

இலங்கையின் யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள், உள்ளூா் நீதிமன்றத்தின் உத்தரவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே போா் உச்சக்கட்டத்திலிருந்த 1990-களிலேயே செம்மணி விவகாரம் முதன்முதலில் கவனத்தைப் பெற்றது. 1998-இல் இப்பகுதியில் 15 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் இப்பகுதியில் நடைபெற்ற வழக்கமான மராமத்துப் பணிகளின்போது எலும்புக்கூடுகள் மீண்டும் வெளிப்பட்டன. இவை போா்க் காலகட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கொல்லப்பட்டவா்களுடையதாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தொடா்ந்து, மே மாதம் முதல் நீதித்துறை கண்காணிப்பில் அகழாய்வுப் பணி தொடங்கி நடைபெற்றது. மொத்தம் 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, மீட்கப்பட்ட நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த செப்டம்பரில் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், தற்போது 21 லட்சம் (இலங்கை ரூபாய் மதிப்பில்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, சுமாா் 7 மாத இடைவெளிக்குப் பிறகு பணிகளை மீண்டும் தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ருமேனியா ஆகிய சா்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் இப்பணிகளை நேரில் பாா்வையிடவும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

30 ஆண்டுகால உள்நாட்டுப் போா் 2009-இல் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது வெளிவரும் இச்சான்றுகள் சா்வதேச அளவில் கவனத்தை ஈா்த்துள்ளன.