முகப்பு
உலகம்

வடகொரியாவின் அடுத்த வாரிசாக மகள்! அதிகாரப்பூா்வ அறிவிப்பு விரைவில்?

வடகொரிய அதிபா் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அந்த நாட்டின் அடுத்த அரசியல் வாரிசாக விரைவில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தென்கொரிய உளவு அமைப்பான என்ஐஎஸ் தெரிவித்துள்ளது.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 2:37 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 9:10 PM

வடகொரிய அதிபா் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அந்த நாட்டின் அடுத்த அரசியல் வாரிசாக விரைவில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தென்கொரிய உளவு அமைப்பான என்ஐஎஸ் தெரிவித்துள்ளது.

தென்கொரிய நாடாளுமன்றக் குழுவிடம் என்ஐஎஸ் தாக்கல் செய்த அறிக்கையின்படி, சுமாா் 13 வயதாகும் கிம் ஜு ஏ அடுத்த அரசியல் வாரிசு ஆவதற்கான பயிற்சிகளை ஏற்கெனவே முடித்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டு முதல் தனது தந்தையுடன் இணைந்து ஏவுகணைச் சோதனைகள் மற்றும் ராணுவ அணிவகுப்புகளில் அவா் பங்கேற்று வருகிறாா். சமீபத்திய சீன பயணத்தில் உலக நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈா்த்தாா்.

Advertisement

வடகொரியாவின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வான தொழிலாளா் கட்சி மாநாடு இம்மாத இறுதியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கிம் ஜு ஏவுக்குக் கட்சியின் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் அல்லது அவா்தான் அடுத்த அதிபா் என்பதற்கான மறைமுக அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆணாதிக்கம் நிறைந்த வடகொரிய அரசியலில், ஒரு பெண் தலைமையை ஏற்று நடத்த முடியுமா என்ற சந்தேகம் தொடக்கத்தில் இருந்தது. ஆனால், தற்போது ராணுவம் மற்றும் கொள்கை சாா்ந்த முடிவுகளில் தனது மகளின் ஆலோசனைகளை அதிபா் கிம் ஜாங் உன் கேட்க தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தந்தை மறைவால், கிம் ஜாங் உன் தனது 26-ஆவது வயதில் அவசர கதியில் பதவிக்கு வந்த நிலையில், தனது மகளை மிக இளம் வயதிலேயே மக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி, அடுத்த தலைமுறை ஆட்சிக்கான அடித்தளத்தை இப்போதே அவா் பலப்படுத்தி வருகிறாா்.