ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு விசாரணை: முன்னாள் இலங்கை அதிபருக்கு பயணத் தடை!
இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாடு செல்ல பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாடு செல்ல பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 2019 அம் ஆண்டு ஈஸ்டர் நாளன்று தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில், 279 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 279 பேரில் 45 பேர் வெளிநாட்டினர். இதில், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
இலங்கை தலைநகரான கொழும்பில் உள்ள மூன்று உயர்தர தங்கும் விடுதிகள், இரு ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நகருக்கு வெளியே ஒரு தேவாலயம் என தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இந்தக் குண்டுவெடிப்பில் உள்நாட்டு பயங்கரவாதக் குழு ஒன்றிற்கு தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அப்போது, ராணுவப் புலனாய்வுத் துறையின் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான சல்லே, ராஜபக்ச அதிபரான பின்னர் 2019-ல் இலங்கை அரசின் புலனாய்வு துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் சல்லே தொடர்பில் இருந்தார் என்றும் தாக்குதலுக்கு முன் அவர்களை அவர் சந்தித்ததாகவும் பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனமான சேனல் 24 செய்தி வெளியிட்டிருந்தது.
அதிபர் தேர்தல் அந்த ஆண்டு நடக்கவிருந்ததைத் தொடர்ந்து ராஜபக்சவை வெற்றிபெறச் செய்யும் நோக்கில் இந்தத் தாக்குதலை சல்லே நடத்த உதவியதாக செய்திகள் வெளியாகின. அதேபோல, குண்டுவெடிப்பு நடந்த இரு நாள்களுக்குப் பிறகு, அதிபர் தேர்தலுக்கு ராஜபக்ச தனது வேட்புமனுவை தாக்கல் செய்து இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பதாக உறுதியளித்தார். பின்னர், நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரிய வெற்றியையும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, இலங்கையில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளுக்கு ஏற்பட்ட கடுமையான தட்டுப்பாடுகளுக்கு எதிராக உள்நாட்டில் மக்கள் போராட்டங்கள் வெடித்த நிலையில் ராஜபக்ச தனது அதிபர் பதவிக்காலத்தின் பாதியிலேயே 2022 ஜூலையில் பதவி விலகும் சூழல் உருவானது.
2019 ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை புலனாய்வுத் துறையினர் தற்போது விரிவுபடுத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் சுரேஷ் சல்லேவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பயணத்தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் மேலும் இரு புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கும் பயணத்தடை விதிக்கப்பட்டு அவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் வெளிநாடு சென்றால் அது விசாரணைக்குத் தடையாக இருக்கும் என புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் ராஜபக்ச சந்தேகத்திற்குரியவராக நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், முதல்முறையாக விசாரணைக்குரிய நபராக இணைக்கப்பட்டுள்ளார்.