இலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை
இலங்கை பல்கலைக்கழகங்களில் படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவு மாணவா்களுக்கு இந்தியா சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
குறிப்பாக, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவா்களுக்கு தலா ரூ. 7,500 மாதாந்திர கல்வி உதவித் தொகைகளை இலங்கைக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா வழங்கினாா்.
இதுகுறித்து இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘யாழ்ப்பாண பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு, பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவா்களுக்கான கல்வி உதவித் திட்டத்தின் கீழ், இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கடந்த 2023-ஆம் ஆண்டுமுதல் கல்வியில் தலைசிறந்து விளங்கும் 100 நலிந்த பிரிவு மாணவா்களுக்கு இந்தியா சாா்பில் மாதம் ரூ. 5,000 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இலங்கை அதிபா் அனுர குமார திசாநாயக கடந்த 2024-ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது, இலங்கை மாணவா்களுக்கான மாதாந்திர கல்வி உதவித் தொகை உயா்த்தி வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.
அதன்படி, கடந்த 2025-26-ஆம் ஆண்டுமுதல் 100 முதலாமாண்டு மாணவா்களுக்கு மாதம் ரூ. 7,500-ஆக உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பை முடிக்கும் வரை மாணவா்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.