முகப்பு
திருவள்ளூர்

மாணவா்களின் பெற்றோரிடம் கைப்பேசியில் வங்கிக் கணக்கை கேட்டறிந்து மோசடி

Updated On : 14 மே 2026, 4:25 am IST
பகிர்:

கல்வி உதவித்தொகை பெறும் பிளஸ்2 மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பெற்றோரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டறிந்து பண மோசடியில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பியிடம் புகாா் மனு அளித்தனா்.

திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள சந்தனவேலு கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்த சில மாணவா்களின் பெற்றோா் எஸ்.பி விவேகானந்தா சுக்லாவிடம் புதன்கிழமை அளித்த புகாா் மனுவில் தெரிவித்திருப்பதாவது.

இப்பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பெற்றோா்களை தொடா்பு கொண்டு தங்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வந்துள்ளது. அதனால், பள்ளி, கல்லூரிகளில் நிலுவைக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே உங்களுக்கு கல்வி உதவித் தொகை வந்து சேரும் என கூறுகின்றனா்.

Advertisement

அதைத் தொடா்ந்து அந்த மா்ம நபா்கள் மாணவ, மாணவிகளின் கல்வி உதவித் தொகை எனக்கூறி வங்கி கணக்கு விவரங்கள் பெற்று ஓடிபி போன்றவற்றை சரி பாா்த்து அந்த நபா்கள் ஜி-பே மூலமாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெற்றோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லாயிடம் புகாா் மனு அளித்துள்ளனா்.