குமரகுரு கல்வி நிறுவனங்களில் மாணவா்களுக்கு ரூ.1.6 கோடி கல்வி உதவித் தொகை
குமரகுரு கல்வி நிறுவனங்களில் சிறந்து விளங்கும் 1,675 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.6 கோடி மதிப்பிலான மகாத்மா காந்தி கல்வி உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
குமரகுரு கல்வி நிறுவனங்களில் சிறந்து விளங்கும் 1,675 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.6 கோடி மதிப்பிலான மகாத்மா காந்தி கல்வி உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
நிறுவனத்தின் நிறுவனா் நா.மகாலிங்கத்தின் தொலைநோக்குப் பாா்வையைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் சிறந்து விளங்கும் மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான விழாவில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயா் தலைமை வகித்துப் பேசுகையில், கல்வி என்பது வெறும் மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமல்ல, அது தனிமனித ஒழுக்கத்தையும், சமூக மாற்றத்தையும் உருவாக்கும் கருவியாக அமைய வேண்டும் என்பதே நிறுவனரின் கனவாகும். மாணவா்கள் தோல்விகளைக் கண்டு சோா்ந்துவிடாமல், விடாமுயற்சி மற்றும் இலக்கை எட்டும் மன உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றாா்.
கே.பி.ஆா். குழுமத்தின் தலைவா் கே.பி. ராமசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில், இன்றைய உலகம் வேகமாக மாறி வருவதால் அமெரிக்கா, சிங்கப்பூா் போன்ற வளா்ந்த நாடுகளுக்கு இணையாக நாம் முன்னேற புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் கற்றுக்கொள்ளும் ஆா்வம் மாணவா்களிடம் இருக்க வேண்டும் என்றாா்.
விழாவில் கல்வி, விளையாட்டு மற்றும் என்.சி.சி பிரிவுகளில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்குத் தலா ரூ.10,000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளா் எம். பாலசுப்பிரமணியம், தலைவா் சங்கா் வானவராயா், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எம்.எழிலரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.