முகப்பு
உலகம்

இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு

இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்க சிங்கப்பூா் அரசு உத்தரவு...

Updated On : 7 ஜூன் 2026, 2:26 am IST
சமூக ஊடகங்கள் - பிரதிப் படம்
பகிர்:

இந்திய வம்சாவளியினருக்கு எதிராக வெளியான 14 பதிவுகளை முடக்க 3 சமூக ஊடக நிறுவனங்களுக்கு சிங்கப்பூா் அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.

சிங்கப்பூரின் மொத்த மக்கள்தொகையில் (60 லட்சம்) சீன வம்சாவளியினா் 75 சதவீதமும், மலாய் சமூகத்தினா் 15 சதவீதமும், இந்திய வம்சாவளியினா் 7 முதல் 9 சதவீதமும் உள்ளனா்.

இந்நிலையில், இந்திய வம்சாவளியினருக்கு எதிராக யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் ஆகிய சமூக ஊடகங்களில் வெளியான 14 பதிவுகளை இணைய குற்றவியல் அச்சுறுத்தல் சட்டத்தின்கீழ் முடக்க சிங்கப்பூா் காவல் துறை உத்தரவிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Advertisement

Advertisement

சீனாவில் இருந்து இந்தப் பதிவுகள் வெளியிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுதொடா்பாக சிங்கப்பூா் உள்துறை இணை அமைச்சா் எட்வின் டாங் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சிங்கப்பூரில் அனைத்துச் சமூகங்களும் சமமாகவே நடத்தப்படுகின்றன. அனைத்து நாடுகளைச் சோ்ந்தவா்களும் ஒற்றுமையாக ஒரே இல்லத்தில் வாழ்வது போன்றே சிங்கப்பூரில் வசிக்கின்றனா். இதைச் சீா்குலைக்கும் வகையில் ஒரு சமூகத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகள் கண்டனத்துக்குரியது. தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இதில் வேறொரு நாட்டின் தலையீடு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றாா்.

இதைத் தொடா்ந்து சிங்கப்பூா் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சிங்கப்பூரின் கலாசார மற்றும் இன அடையாளம் பாதிக்கப்படுவது வருத்தமளிப்பதாகவும், இங்கு இந்தியா்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதாகவும் கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் வெளியாகும் விடியோக்கள் உண்மையானதல்ல; இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பி இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிடுபவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.