பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானை அழித்துவிடுவேன்: டிரம்ப் மிரட்டல்!
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ”ஈரானை முற்றிலுமாகத் அழித்துவிடுவேன்” என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ”ஈரானை முற்றிலுமாகத் அழித்துவிடுவேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளியன்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் இன்று வெளியானது. அதில், "நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முடிவில் இருக்கிறோம். பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், நான் ஈரானைக் கடுமையாகத் தாக்கித் அழித்துவிடுவேன்” என்று பேசியுள்ளார்.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கவும், அவர்கள் மீதான தடைகளை நீக்கவும் தயாராக இருக்கிறீர்களா எனக் கேட்டபோது அதற்கு இல்லை என டிரம்ப் பதிலளித்தார்.
Advertisement
Advertisement
ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் வரையில் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதுபற்றிப் பேசுகையில், "ஒப்பந்தம் முடிவான பிறகே அதுபற்றி முடிவு செய்வோம். அவர்கள் சரியான விதத்தில் நடந்துகொண்டால் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம். ஒப்பந்தம் செய்து நட்புறவுடன் இருந்தால் அவர்களிடமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எடுத்து அழித்துவிடுவோம்” எனக் கூறினார்.
ஈரானுக்கு எதிரான போரின் பேச்சுவார்த்தையில் ஒரு முடிவை எட்டுவதில் அவர்களிடமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் முக்கியப் பங்காற்றி வருகின்றது. மேலும், ஈரானிடமிருந்து முடக்கப்பட்ட சொத்துகளைக் கொண்டு அவர்களால் பாதிக்கப்பட்ட வளைகுடா நாடுகளுக்கு உதவ அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமின்றி, “லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மீது மேற்கொண்டு துல்லியமான தாக்குதல்களை நடத்தவேண்டும்” என்றும் அந்த நேர்காணாலில் டிரம்ப் தெரிவித்தார்.
லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், இஸ்ரேல் அங்கு தொடர்ந்து தாக்குதல்களைத் நடத்தி வரும் சூழலில் டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.