ஈரான் ஒப்பந்தத்துக்கு இணங்காவிட்டால் எதுவும் மிஞ்சாது! - டிரம்ப் மிரட்டல்!
ஈரான் அமைதி ஒப்பந்தத்துக்கு இணங்காவிட்டால் அந்நாட்டில் எதுவும் மிஞ்சாது என அமெரிக்க அதிபர் மிரட்டல் விடுத்துள்ளார்...
ஈரான் அமைதி ஒப்பந்தத்துக்கு இணங்கவில்லை என்றால் அந்நாட்டில் எதுவும் மிஞ்சாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது கடந்த பிப். 28 அன்று தாக்குதல் நடத்தின. இதில், அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனால், இருதரப்புக்கும் இடையே போர் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப். 8 அன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. மேலும், பாகிஸ்தான் தலைமையிலான அமைதிப்பேச்சுக்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
Advertisement
இருப்பினும், நடைபெற்ற அமைதிப்பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனால், மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்கா முன்மொழியும் அமைதி ஒப்பந்தத்துக்கு ஈரான் இணங்கவில்லை என்றால் அந்நாட்டில் எதுவும் மிஞ்சாது என அதிபர் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 17) அன்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுபற்றி, தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் கூறியதாவது:
“ஈரானைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு நேரமில்லை. அவர்கள் வேகமாகச் செயல்பட வேண்டும். இல்லையென்றால், அவர்களுக்கு எதுவும் மிஞ்சாது. நேரம் மிகவும் முக்கியமானது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா உடனான போரில், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியும், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியும் ஈரானிய படைகள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.