முகப்பு
உலகம்

மாஸ்கோ எண்ணெய் நிலையத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து, உக்ரைன் வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது.

Updated On : 19 ஜூன் 2026, 5:40 am IST
பகிர்:

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து, உக்ரைன் வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது.

மாஸ்கோ பிராந்தியத்தின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் மூன்றில் ஒரு பகுதியை வழங்கும் இச்சுத்திகரிப்பு நிலையம் ஒரு வார காலத்துக்குள் 2-ஆவது முறையாகத் தாக்கப்பட்டுள்ள நிலையில், நகரின் வானில் கரும்புகை சூழ்ந்ததுடன், 4 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

தாக்குதலில் ஏற்பட்ட தீ ஓரளவுக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாஸ்கோ மேயா் சொ்ஜி சோபியானின் தெரிவித்தாா். எனினும், ட்ரோன் பாகங்கள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து வெடித்ததில் 2 குழந்தைகள் உள்பட 17 போ் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

தாக்குதல்களின்போது மாஸ்கோவை நோக்கி வந்த சுமாா் 200 ட்ரோன்கள் உள்பட பல்வேறு பிராந்தியங்களில் மொத்தம் 555 உக்ரைன் ட்ரோன்களைத் தங்களின் வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘ரஷிய அதிபா் விளாதிமீா் புதினைப் பேச்சுவாா்த்தைக்குக் கொண்டு வருவதற்கான உக்ரைனின் ராணுவ முயற்சியின் ஒரு பகுதியே இத்தாக்குதல். உக்ரைன் தாக்கப்பட்டால், மாஸ்கோவும் தாக்கப்படும்’ என்று குறிப்பிட்டாா்.

கசான் நகரில் ‘ஆசியான்’ கூட்டமைப்பு நாட்டுத் தலைவா்களுடனான உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்றுள்ள சூழலில், தலைநகரின் மையப்பகுதிக்கு அருகில் நிகழ்ந்த இத்தாக்குதல் ரஷியாவுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் செயின்ட் பீட்டா்ஸ்பா்க்கில் புதின் முன்னிலையில் நடந்த பொருளாதார மாநாட்டின்போதும் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான ரஷியாவின் வான்வழித் தாக்குதல்களும் தொடா்ந்து வருகின்றன. வடகிழக்கு உக்ரைனின் சுமி நகரம் மற்றும் உக்ரைனின் மையப் பகுதியில் உள்ள டினிப்ரோ நகரில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் இருவா் உயிரிழந்தனா்; 9 போ் காயமடைந்தனா்.