ரஷியாவில் 800 கி.மீ. தொலைதூர இலக்கை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உக்ரைன் தாக்குதல்
உக்ரைன் படைகள் ரஷிய எல்லையிலிருந்து சுமார் 800 கி.மீ. உள்நாட்டில் அமைந்துள்ள தொலைதூர இலக்கைக் குறிவைத்து வான் வழி தாக்குதல் நடத்தியதாக உக்ரைனின் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார். ரஷியாவில் அமைந்துள்ள ‘சிஸ்ரான்’ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை புதன்கிழமை (மே 20) நள்ளிரவில் நடத்தியது.
இது குறித்து, ரஷியாவின் சமாரா பிராந்திய ஆளுநர் யாசேஸ்லாவ் ஃபெடோரிச்சேவ் கூறுகையில், சிஸ்ரான் பகுதியில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் இருவர் பலியானதாக தெரிவித்தார். ஆனால், உக்ரைனின் கூற்றுப்படி எண்ணெய் ஆலையில் தாக்குதல் நடந்ததா என்பதைப் பற்றி அவர் உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில், முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ‘ராஸ்நெஃப்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான சிஸ்ரான் சுத்திகரிப்பு ஆலையில் உக்ரைனிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் தாக்குதல்களை நடத்தியதாக ரஷிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் உக்ரைன் - ரஷியா இடையேயான தொடர் சண்டையில், ரஷியாவில் தொலை தூர இலக்குகளைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல்களை விரிவாக்கம் செய்துள்ளது. இதற்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை உக்ரைன் பயன்படுத்தி வருகிறது.
சுமார் 4 ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் போரில் ஆரம்பகால கட்டத்தில் நேட்டோ நாடுகளின் ராணுவ உதவியை பெருமளவில் சார்ந்திருந்த உக்ரைனிடமிருந்து இப்போது பிற நாடுகள் ராணுவ தொழில்நுட்ப உதவியை நாடும் நிலைக்கு உக்ரைன் வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.