சூடானில் திருமண நிகழ்ச்சியில் ட்ரோன் தாக்குதல்: 30 பேர் பலி
சூடானின் வடக்கு டர்பரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 30 பேர் பலி குறித்து...
சூடானின் வடக்கு டர்பரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 30 பேர் பலியாகினர், பலர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலுக்கு ராணுவப் படைகளே காரணம் என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வடக்கு டர்பரில் உள்ள குடும் நகரில் வியாழக்கிழமை திருமணம் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அந்த திருமண நிகழ்ச்சியை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Advertisement
இந்த தாக்குதலில் 30 பேர் பலியாகினர். பலியானவர்களில் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் என ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபான் டுஜாரிக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமண நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா., பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு அரசின் ராணுவப் படைகளே காரணம் என்று உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன, ஆனால் ராணுவத்திடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சூடானின் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த 2023 ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் போரின் பின்னணியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 40,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.