ஈரானின் மணிமகுடத்தைத் தாக்கிய அமெரிக்கா.. எண்ணெய் வளம் செழிக்கும் கார்க் தீவு!
ஈரானின் மிகவும் எண்ணெய் வளமிக்க மிக முக்கியத் தீவான கார்க் தீவில் அமெரிக்கா தாக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...
ஈரானின் எண்ணெய் வளமிக்க மிக முக்கியத் தீவான கார்க் தீவில் அமெரிக்க ராணுவம் சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணு ஆயுதக் கொள்கைகளைக் கைவிடக் கோரி ஜெனீவாவில் பேச்சுவார்த்தையுடன் தொடங்கி பிரச்சினை போராக உருவான நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் சேர்ந்து நடத்திய கூட்டுத்தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவரும் மதகுருவுமான அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதன்பின்னர், கடந்த இரண்டு வாரங்களாக வளைகுடா நாடுகள் மீது ஈரானும், ஈரான் மீது அமெரிக்காவும் மாறி மாறி தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன.
போர் தொடங்கி இதுவரை 14 நாள்களைக் கடந்த நிலையில், இதுவரை பிடிகொடுக்காத ஈரானின் கார்க் தீவு மீது ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவில் உள்ள ராணுவத் தளங்களை அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக அழித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று (மார்ச் 14) காலை தெரிவித்தார்.
Advertisement
Advertisement
மதகுரு கமேனி கொல்லப்பட்டபோது தெஹ்ரானில் பல்வேறு வான்பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி உள்ளே நுழைந்த பி-1, பி-2 உள்ளிட்ட போர் விமானங்களை கட்டடங்களையும், ராணுவத்தளவாடங்களையும் தாக்கி அழித்தன.
அதேபோலவே, கார்க் தீவிலும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. ஈரான் ஏற்றுமதி செய்யும் 90 சதவிகிதம் எண்ணெய் உற்பத்தி 20 சதுர கி.மீ. பரப்பளவுக்கு பரந்து விரிந்த கார்க் தீவில் செய்யப்படுகிறது.
பாரசீக வளைகுடாவில் புஷேர் மாகாணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இந்தத் தீவு பரப்பளவில் மிகவும் சிறிய இடத்தைக் கொண்டிருந்தாலும், உலகளவிலான எண்ணெய் உற்பத்தியில் மிகப் பெரிய பங்கை கொண்டிருக்கிறது. வெறும் 8 கி.மீ நீளத்தையும் 5 கி.மீ. அகலத்தையும் கொண்டுள்ள இந்தத் தீவு பாறை மற்றும் சுண்ணாம்புக் கட்டிகளால் ஆன தீவு.
இந்தத் தீவை ஈரானின் மணிமகுடம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சுட்டிக்காட்டியிருக்கும் வேளையில், இந்தத் தீவை ஈரானிய எழுத்தாளர் ஜலல் அல் இ அகமது என்பவர், “பாரசீக வளைகுடாவின் அனாதை முத்து” என்று வர்ணித்திருக்கிறார்.
இந்தத் தீவு எண்ணெய் சேமித்துவைக்கும் மிகப்பெரிய கலன்கள், எண்ணெய் ஏற்றுமதி செய்யக்கூடிய முனையம், குழாய் வழியாக எண்ணெய் விநியோகத்தின் மையப்புள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது.
அபூஸர், ஃபோரூஸான் மற்றும் டொரூத் போன்ற எண்ணெய் வயல்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கடலோரத்தில் இருக்கும் தீவு என்பதால், எண்ணெய் உற்பத்திக்கும், கடல்வழி வணிகத்துக்கும் பெரும் பங்காற்றுகிறது. 1960, 1970 காலகட்டங்களில் ஈரானின் வளர்ச்சிக்கும் இந்தத் தீவு முக்கிய பங்காற்றியிருக்கிறது.
அஹ்வாஸ், மருன் மற்றும் கச்சஸரன் ஆகிய இடங்களில் இருந்து வரும் எண்ணெய் நேரடியாக கலன்களில் சேமிக்கப்படுகின்றன. இந்தத் தீவிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் 95 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.
எண்ணெய் வளத்தை மட்டுமின்றி, இந்தத் தீவானது 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘மீர் முகமது ஆலயம்’, அகாமனிசியப் காலத்து கல்வெட்டு, ஜொராஷ்டிரிய கல்லறைகள், கிறிஸ்தவர்களின் கல்லறைகள், சசானியக் காலத்து கல்லறைகள், இஸ்லாமியர்களின் கல்லறைகள் மற்றும் 1747 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு டச்சு கோட்டை ஆகியவைகளும் உள்ளன.
அதேபோலவே, பாரசீக வளைகுடாவில் கெஷ்ம் தீவு மற்றும் அபு மூசா, பெரிய தன்பு மற்றும் சிறிய தன்பு ஆகிய தீவுகளும் அமைந்திருக்கின்றன.
முன்னதாக, அமெரிக்காவும் இஸ்ரேலும் கார்க் தீவை கவனமாக நோட்டமிட்டு வந்ததாகவும், கைப்பற்றும் நோக்கத்துடனேயே 2500 கடற்படை வீரர்களுடன் யுஎஸ் திரிபோலி போர்க்கப்பலை கார்க் தீவுக்கு அருகே அனுப்பி வைத்துத்திருக்கிறது அமெரிக்க ராணுவம். அதன்பின்னரே தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
ஈரானின் மதகுருவின் மாளிகை, எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமின்றி, இந்தப் போரின் தொடர்ச்சியாக எண்ணெய் உற்பத்தியில் 90 சதவிகிதம் பங்களிக்கும் கார்க் தீவையும் அமெரிக்கா தாக்கியிருப்பது உலகளவில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் உருவாக்கியிருக்கிறது.
Spread over a meagre 20 square kilometres, Iran's Kharg island processes 90 per cent of the country's total oil exports, driving the region to the edge as the US attacked it on Friday, 15 days into the Middle East conflict.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.