ஈரானிய துணை ராணுவப் படையின் தலைமைத் தளபதி கொலை! - இஸ்ரேல் அறிவிப்பு!
ஈரானின் பசிஜ் துணை ராணுவப் படையின் தலைமைத் தளபதியைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு...
ஈரானின் பசிஜ் எனப்படும் துணை ராணுவப் பிரிவின் தலைமைத் தளபதியைக் கொன்றதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகளின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி உள்பட அந்நாட்டின் ராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் ஆகியோர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் கீழ் செயல்பட்டு வரும் பசிஜ் துணை ராணுவப் படையின் தலைமைத் தளபதியான கோலம்ரெசா சுலைமானி கொல்லப்பட்டதாக, செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ராணுவத் தளபதி கோலம்ரெசா சுலைமானி கொல்லப்பட்டது குறித்து ஈரானின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, பசிஜ் படையின் நடவடிக்கைகளுக்காக, கோலம்ரெசா சுலைமானி மீது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.