லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 1,001 பேர் பலி! 118 குழந்தைகள் கொல்லப்பட்டனர்!
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறித்து...
லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,001 ஆக அதிகரித்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக, கடந்த மார்ச் 2 முதல் அந்நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இதையடுத்து, லெபனானின் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் குடியிருப்புகள் நிரம்பிய பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களில் கடந்த மார்ச் 2 முதல் வியாழக்கிழமை (மார்ச் 19) வரை 1001 பேர் கொல்லப்பட்டதாக, லெபனானின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் லெபனானில் இதுவரை 79 பெண்கள் மற்றும் 118 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 2,584 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டார். இதையடுத்து, ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.