இஸ்ரேல் - லெபனான் இடையே நேரடி பேச்சுவார்த்தை! வாஷிங்டனில் தொடங்கியது!
அமெரிக்க தலைநகரில் இஸ்ரேல் - லெபனான் இடையில் நேரடி பேச்சுவார்த்தை...
அமெரிக்காவில், இஸ்ரேல் மற்றும் லெபனான் பிரதிநிதிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தைத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைக்கு இடையே மீண்டும் தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில், இருதரப்பும் சண்டையைக் கைவிட முன்வந்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த திங்களன்று (ஜூன் 1) அறிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் லெபனான் மற்றும் இஸ்ரேலிய பிரதிநிதிகள் இடையே இன்று நேரடி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. இருதரப்புக்கும் இடையே 4 ஆவது முறையாக நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை 2 நாள்களுக்குத் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து, அமெரிக்காவுக்கான இஸ்ரேலின் தூதர் யெசியேல் லெய்டர் மற்றும் லெபனானின் பிரதிநிதி நாதா ஹமாதே முவாத் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவின் மூத்த ஆலோசகர் டேனியல் ஹோலர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால், கடந்த திங்களன்று லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 127 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சூழலில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நடைபெறும் இந்த நேரடி பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.