போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டது குறித்து...
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், லெபனானின் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே புதிய அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், தெற்கு லெபனான் பகுதிகளைக் குறிவைத்து சனிக்கிழமை (ஜூன் 6) காலை இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
மார்ஜாயூன் மாவட்டத்தின் நபாட்டியே நகரத்தின் மீதான இந்தத் தாக்குதலில், லெபனான் ராணுவத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொல்லப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
Advertisement
Advertisement
இதேபோல், சாக்சாகியா கிராமத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, அரசு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சமீபத்தில், அமெரிக்கா தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும், இந்த அமைதி ஒப்பந்தத்தை எதிர்த்த ஈரானிய அரசுக்கு, லெபனான் அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.
முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 2 ஆம் தேதி இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே வெடித்த போரில், லெபனானில் 3,500 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.