மருத்துவமனை மீது தாக்குதல்: சூடானில் 64 பேர் பலி!
சூடானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி...
சூடானில் கடந்த வாரம் மருத்துவமனை மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் உள்நாட்டுப் போரால் பதற்றம் நிலவி வருகிறது. ராணுவத்திற்கும் துணை ராணுவப் படையான பாராமிலிட்டரி படைக்கும் ஏற்பட்ட அதிகாரப் போர் நாட்டின் சூழலை மோசமாக்கியது.
இரு படைகளும் ஒருவர்மீது ஒருவர் மாறி மாறித் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சூடானின் தர்ஃபூர் நகரில் கடந்த வாரம் அல் தீன் பயிற்சி மருத்துவமனையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 13 குழந்தைகள் உள்பட 64 பேர் கொல்லப்பட்டதாகவும் 89 பேர் படுகாயமடைந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
ராணுவப் படையினர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக துணை ராணுவப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ராணுவப் படையினர் இந்தப் புகாரை மறுத்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதல் அருகிலிருந்த காவல் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட நிலையில் தவறி மருத்துவமனை மீது நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பொதுவெளியில் அதிகாரிகள் பேச அங்கு அனுமதி இல்லாத காரணத்தால் அதிகாரிகள் தங்களின் அடையாளத்தை மறைத்துப் பேசினர்.
சூடானில் உள்நாட்டுப் போரின் காரணமாக இதுவரை 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை குறைவானது என்றும், உண்மையான எண்ணிக்கை இதைவிட பலமடங்கு அதிகமானது என சூடானில் உள்ள நிவாரணக் குழுக்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மருத்துவமனைகள் மீது மட்டும் நடத்தப்பட்டத் தாக்குதல்களில் இதுவரை 2,000 பேர் கொல்லப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது.
உலக சுகாதார நிறுவன நிர்வாக இயக்குநர் கெப்ரேயஸ் கூறுகையில், “போதுமான இரத்தம் சிந்தப்பட்டுவிட்டது. போதுமான துயரங்கள் இழைக்கப்பட்டுள்ளன. சூடானில் மோதலை நிறுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.
Strike on a hospital in Sudan killed at least 64 people
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.