இந்தியக் கப்பல்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் கூறுவது ஆதாரமற்றது: ஈரான்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு வைத்திருந்தார். அவை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என ஈரான் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஓமன் வளைகுடாவில் ஒரே வாரத்தில் 3 இந்தியக் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், அப்பாவி இந்திய மாலுமிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். அதனை திசைதிருப்பும் விதமாக டிரம்ப் இவ்வாறு குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பதாகவும் ஈரான் தூதரகம் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தது.
Advertisement
Advertisement
ஜூன் 8 அன்று பலாவ் நாட்டின் கொடியேந்தி வந்த கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதிலிருந்த 24 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டனர்.
ஜூன் 10 அன்று, பலாவ் நாட்டு கொடியேந்திய மற்றொரு கப்பல் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில், கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
ஜூன் 11 அன்று, கினியா பிசாவ் நாட்டுக் கொடியேந்தி வந்த மற்றொரு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் கப்பலில் 20 இந்தியர்கள் இருந்தனர்.
இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதை ஏற்கமுடியாது என அமெரிக்கத் தூதரக பொறுப்பாளர் ஜேசன் மீக்ஸை இந்தியா வரவழைத்து அவரிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியக் கப்பல்கள் தாக்கப்பட்டு இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் இந்தியா வரவழைக்கப்படுவது இது இரண்டாவது முறை.
இதுபற்றி வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறுகையில், ”செட்டேபெல்லோ, மாரிவெக்ஸ் மற்றும் ஜல்வீர் என்கிற 3 கப்பல்கள் மீது அமெரிக்க கப்பற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் இரண்டு கப்பல்கள் அமெரிக்க கருவூலத்தின் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் விதித்த தடைகளுக்கு உட்பட்டவை. ஒன்று மட்டும் விதிமுறைகளுக்கு இணங்காததாக வகைப்படுத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.
ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. அந்த முற்றுகை நடவடிக்கையை மீறி செயல்பட்டதால் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.