ஹோர்முஸ் நீரிணை திறப்பு! ஈரானுக்கு டிரம்ப் இரு நாள் கெடு!
ஹோர்முஸ் நீரிணையை 48 மணி நேரத்துக்குள் திறக்க வேண்டும் என ஈரானுக்கு அமெரிக்கா கெடு விதித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் 48 மணி நேரத்துக்குள் திறக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
ஈரானுடனான போரில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கும் முயற்சியில் நட்பு நாடுகள் தங்களின் போர்க் கப்பல்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். இருப்பினும், டிரம்ப்பின் கோரிக்கையை பெரிதாய் எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில்தான், அடுத்த 48 மணிநேரத்துக்குள் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறக்க வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இல்லையெனில், ஈரானின் மின் உற்பத்தி கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். குறிப்பாக, ஈரானின் பெரிய மின் உற்பத்தி கட்டமைப்பின் மீதுதான் முதல் தாக்குதல் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.
மேலும், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டுக் கப்பல்கள், அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியே அனுமதிக்க முடியாது என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில்தான், ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.