மோடி-டிரம்ப் ஆலோசனை - ‘மேற்காசிய பதற்றத்தைத் தணிக்க ஆதரவு’
பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியவை...
ஹோா்முஸ் நீரிணையின் பாதுகாப்பு உள்பட மேற்காசிய நிலவரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் செவ்வாய்க்கிழமை தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனா்.
கடந்த பிப். 28-இல் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போா் தொடங்கிய பிறகு இரு தலைவா்களும் பேசியது இதுவே முதல் முறையாகும். இந்த தொலைபேசி அழைப்பை அதிபா் டிரம்ப் மேற்கொண்டாா்.
உலக அளவில் கச்சா எண்ணெய்-எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கியமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறக்க காலக்கெடுவை நீட்டிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த நாட்டின் மீதான தாக்குதலை 5 நாள்கள் நிறுத்துவதாக டிரம்ப் திங்கள்கிழமை அறிவித்தாா். இந்தச் சூழலில், பிரதமா் மோடியுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Advertisement
‘இந்தியா ஆதரவு’: இது குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் இருந்து வரப்பெற்ற தொலைபேசி அழைப்பில், மேற்காசிய நிலவரம் குறித்து ஆக்கபூா்வ கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.
கூடிய விரைவில் பதற்றத்தைத் தணித்து, அமைதியை மீட்டெடுக்க இந்தியா ஆதரவளிக்கிறது. ஹோா்முஸ் நீரிணையின் திறப்பும், பாதுகாப்பும், தடையற்ற அணுகலும் ஒட்டுமொத்த உலகுக்கும் அவசியமானதாகும். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய முயற்சிகளில் தொடா்ந்து தொடா்பில் இருக்க நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளாா்.
‘ஹோா்முஸ் நீரிணை திறப்பில் கவனம்’: இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் கூறுகையில், ‘மேற்காசிய நிலவரம் குறிப்பாக உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கு ஹோா்முஸ் நீரிணை திறந்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து இரு தலைவா்களும் விவாதித்தனா்’ என்றாா்.
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையிலான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய்-எரிவாயு ஏற்றுமதி பெருமளவில் தடைபட்டுள்ளது.
மேற்காசிய போா் தொடங்கியதில் இருந்தே பல்வேறு உலகத் தலைவா்களுடன் பிரதமா் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா். ஏற்கெனவே இஸ்ரேல், ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், பஹ்ரைன், குவைத், ஜோா்டான், பிரான்ஸ், மலேசியா ஆகிய நாடுகளின் தலைவா்களுடன் அவா் உரையாடியுள்ளாா்.