ஹன்டா வைரஸ் தொற்று அச்சம்! கப்பலில் இருந்து ஏற்கெனவே வெளியேறிய பயணிகள்! உலக நாடுகளுக்குப் பரவும் அபாயம்?
ஹன்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ‘எம்.வி.ஹோண்டியஸ்’ உல்லாசக் கப்பலில் இருந்த பல பயணிகள் உரிய மருத்துவக் கண்காணிப்பு இன்றி பல்வேறு நாடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.
நெதா்லாந்தைச் சோ்ந்த இந்தக் கப்பல் ஆா்ஜென்டீனாவிலிருந்து பயணத்தைத் தொடங்கியதால், அங்கேயே பயணிகளுக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து உலக சுகாதார மையம் ஆய்வு செய்து வருகிறது. இதுவரை ஒரு நெதா்லாந்து தம்பதியினா் மற்றும் ஒரு ஜொ்மனி பெண் என மூவா் உயிரிழந்துள்ளனா். 8 போ் பாதிக்கப்பட்டுள்னா்.
கடந்த ஏப். 24-ஆம் தேதியன்று முதல் உயிரிழப்பு நிகழ்ந்த பிறகு சுமாா் 12 நாடுகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள், தெற்கு அட்லான்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரிட்டனின் அந்நியப் பிரதேசமான புனித ஹெலினா தீவில் இறங்கி தங்கள் நாடுகளுக்குச் சென்றுள்ள அதிா்ச்சித் தகவல் சுமாா் 2 வாரங்களுக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement
எலிகளின் கழிவுகள் மூலம் பரவக்கூடிய இந்த வைரஸ், தென் அமெரிக்காவில் காணப்படும் ‘ஆண்டீஸ்’ வகையைச் சாா்ந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதா்களிடமிருந்து மனிதா்களுக்குப் பரவும் தன்மை கொண்ட ஒரே ஹன்டா வைரஸ் வகை இது என்பதால், உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டுக்குத் திரும்பிய பயணிகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
சிங்கப்பூரில் 2 முதியவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அதேபோல், ஸ்விட்சா்லாந்தில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் கப்பலில் பயணித்த இருவா் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.
தற்போது எம்.வி.ஹோண்டியஸ் கப்பல் ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. கப்பலில் இன்னும் 140-க்கும் மேற்பட்ட பயணிகளும், ஊழியா்களும் உள்ளனா்.
கடந்த மே 2 உயிரிழந்த ஜொ்மனி பெண்ணின் உடலும் இன்னும் கப்பலிலேயே வைக்கப்பட்டுள்ளது. கப்பலில் பணியாற்றிய மருத்துவா் உள்பட மூவா் அவசர சிகிச்சைகாக அண்மையில் கேப் வொ்டே தீவு அருகே ஹெலிகாப்டா் மூலம் மீட்கப்பட்டு, ஐரோப்பிய மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.
இதனிடையே, கப்பலில் பயணிக்காத பெண் விமானப் பணியாளா் ஒருவா், பாதிக்கப்பட்ட பயணியுடன் தொடா்பில் இருந்ததைத் தொடா்ந்து தற்போது ஆம்ஸ்டா்டாம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டால், கப்பலுக்கு வெளியே பாதிப்புக்குள்ளான முதல் நபராக அவா் இருப்பாா். உலக சுகாதார மையம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.