ஹன்டா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுமா?
ஹன்டா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்ஜென்டினாவில் இருந்து ஸ்பெயினுக்கு வந்த எம்வி ஹோண்டியஸ் சொகுசு கப்பலில் இருந்த பயணிகள் சிலருக்கு ஹன்டா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து அந்தக் கப்பல் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.
கப்பலில் இருந்த ஒரு சிலருக்கு ஹன்டா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையல், அவா்களில் மூவா் உயிரிழந்தனா்; ஒருவரின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது; மூவரிடம் லேசான அறிகுறிகள் தென்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்த செய்திகள், உலக மக்களிடைய மீண்டும் கரோனா பேரிடர் போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
Advertisement
இந்த வைரஸ், நிச்சயமாக விலங்குகளிடமிருந்து குறிப்பாக கொறித்து உண்ணும் அணில் போன்ற விலங்குகளிடமிருந்துதான் மனிதர்களுக்குப் பரவியிருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே வைரஸ் பாதித்த விலங்குகள் அல்லது அதன் உமிஷ்நீர், சிறுநீர் மூலமாகவும் மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம்.
குறிப்பாக, விலங்குகளின் எச்சங்கள் இருக்கும் பகுதியை முறையான பாதுகாப்பு இல்லாமல் சுத்தப்படுத்தும்போது மனிதர்களுக்கு சுவாசித்தல் மூலமாகக் கூட இது பரவியிருக்கலாம். இது ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கும் பரவுவது மிகவும் கடினம்தான். அதாவது கரோனா தொற்றை போல குறுகிய நேரத்தில் பரவாமல், நீண்ட காலம் நெருக்கமாக இருந்தால்தான் ஹன்டா தொற்று பரவும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா்.
வட அமெரிக்கா மற்றும் சில பகுதிகளில் இந்த வைரஸ் காணப்படுகிறதாம்.
எனவே, அணில் போன்ற கொறித்துண்ணும் விலங்குகள் அதிகம் வாழும் பகுதிகளை சுத்தப்படுத்தும்போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
ஒரேயிடத்தில் இருக்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்படும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஹன்டா தொற்று கண்டறியப்பட்ட எம்வி ஹோண்டியஸ் கப்பல் ஸ்பெயின் சென்றடைந்த நிலையில், அங்குள்ள கேனரி தீவுகளில் உள்ள கிரனாடில்லா துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.