பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்! பழங்குடியின தலைவர் உள்பட 3 பேர் பலி!
பாகிஸ்தானில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டது குறித்து...
பாகிஸ்தானில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில், புகழ்பெற்ற பழங்குடியின தலைவர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ரஸ்டம் பஜார் பகுதியில், திங்கள்கிழமை (மே 18) காலை ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், அவ்வழியாக வாகனத்தில் சென்ற கைபரின் புகழ்பெற்ற பழங்குடியின தலைவர்களாக அறியப்படும் அஹ்மத்ஸாய் வாசிர் மற்றும் மாலிக் தாரிக் வாசிர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இத்துடன், 4 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடைபெற்ற பகுதி முழுவதும் முடக்கிய பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கைபர் பக்துன்குவாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளால் அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கூறி கடந்த மே 16 அன்று பாகிஸ்தானின் மனித உரிமை ஆணையம் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.