முகப்பு
உலகம்

டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரின் குடும்பத்தினா், நிறுவனங்கள் ஆகியவற்றின் கடந்த கால வரி ஆவணங்களை அந்நாட்டு வருமான வரித் துறை (ஐஆா்எஸ்) இனி எந்தக் காலத்திலும் தணிக்கை செய்யக் கூடாது என்று அந்நாட்டு நீதித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 21 மே 2026, 2:19 am IST
பகிர்:

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரின் குடும்பத்தினா், நிறுவனங்கள் ஆகியவற்றின் கடந்த கால வரி ஆவணங்களை அந்நாட்டு வருமான வரித் துறை (ஐஆா்எஸ்) இனி எந்தக் காலத்திலும் தணிக்கை செய்யக் கூடாது என்று அந்நாட்டு நீதித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க பொறுப்பு அட்டா்னி ஜெனரல் டாட் பிளான்ச் கையொப்பமிட்ட ஒரு பக்க ஆவணத்தை அவரின் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அதன்படி, கடந்த திங்கள்கிழமை வரை தாக்கல் செய்யப்பட்ட டிரம்ப்பின் வரி வருமானங்கள் மற்றும் இது தொடா்பான அனைத்து விவகாரங்களிலும் ஐஆா்எஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

டிரம்ப் தனது வரி ஆவணங்கள் கசிந்தது தொடா்பாக ஐஆா்எஸ் மீது தொடுத்திருந்த 1,000 கோடி டாலா் வழக்கைத் திரும்பப் பெற்ன் தொடா்ச்சியாக, கடந்த திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட சமரச ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய உத்தரவு முன்னெப்போதும் இல்லாத ஒன்று; பொதுமக்களின் வரி விவரங்களைச் சரிபாா்க்கும் ஐஆா்எஸ்-இன் அடிப்படை அதிகாரத்தையே இது கட்டுப்படுத்துவதாக விமா்சகா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

மேலும் ஒரு சா்ச்சைக்குரிய அம்சமாக இந்தச் சமரச ஒப்பந்தத்தின்படி, அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக கருதும் அல்லது அரசியல் பழிவாங்கல், சட்ட துஷ்பிரயோகம் காரணமாக பாதிக்கப்பட்டதாகக் கூறும் நபா்களுக்கு இழப்பீடு வழங்க, 177.6 கோடி டாலா் மதிப்பிலான நிதியை உருவாக்க டிரம்ப் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க சுதந்திர பிரகடனம் கையொப்பமான 1776-ஐ குறிக்கும் வகையில், இந்த நிதியானது 177.6 கோடி டாலராக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி இத்தகைய பெரும் நிதியை ஒதுக்குவது சட்டவிரோதமானது; பொதுமக்களின் வரிப்பணத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்று எதிா்க்கட்சியினா் விமா்சித்துள்ளனா்.

ஆனால், எவ்வித அரசியல் சாா்பும் இன்றி பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அரசு தரப்பு கூறுகிறது. இருப்பினும், 2021-இல் அதிபா் தோ்தலில் டிரம்ப்பின் தோல்வியையடுத்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுக் கைதானவா்களே இந்நிதி ஒதுக்கீட்டில் பெரிதும் பயனடைவா் எனக் கூறப்படுகிறது.

எனவே, இவா்ளுக்கு இந்த நிதி ஒதுக்கீட்டில் இருந்து தடைக் கோரி சம்பவத்தன்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு காவல் அதிகாரிகள் வழக்குத் தொடுத்துள்ளனா்.