குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: மகரம்

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது..
மகர ராசி
மகர ராசி
Published on
Updated on
2 min read

2025 ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 11ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மே 14ஆம் தேதியும் பெயர்ச்சியாகின்றது.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்களின் ஆறாம் ராசியான ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இந்தக் காலகட்டத்தில் பொருளாதாரம் சீராக இருந்தாலும் முக்கிய செலவுகளுக்கு சிரமப்படுவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணம் மீண்டும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதனால் அனைத்து விஷயங்களிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துகொள்ளாமல் கோபப்படுவார்கள். குடும்பத்தில் சிறு சஞ்சலங்களும் குழப்பங்களும் ஏற்படும். மற்றபடி உடல் ஆரோக்யத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. என்றாலும் உணவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளை உடனடியாக கவனிக்கவும். சகோதர சகோதரிகளிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ளவும்.

குரு பகவானின் பார்வை உங்களின் தொழில் ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் செய்தொழிலில் இருந்த இடையூறுகளும் தடங்கல்களும் நீங்கும். பொருளாதாரத்தில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் பெயரும், புகழும் உயரும். இதனால் சில பாராட்டுகளையும் விருதுகளையும் பெறுவீர்கள். கூட்டாளிகளுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதிலிருந்த பயம் நீங்கும்.

குரு பகவானின் பார்வை அயனஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் எதிர்காலத்திற்காக நீங்கள் தீட்டும் திட்டங்கள் வெற்றி பெறும். உங்களைத் தனிமைப்படுத்திய உறவினர்கள் மறுபடியும் வந்து இணைவார்கள். ஆனாலும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது. சிலருக்கு திடீரென்று நெடுந்தூரப் பயணங்களைச் செய்ய நேரிடும்.

குரு பகவானின் பார்வை உங்களின் குடும்பஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் மனத்தாங்கல்களை ஆத் ம நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வீர்கள். அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்யம் சீராகும். மற்றபடி எவருக்கும் இந்த ஆண்டு வாக்கு கொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ கூடாது.

உத்தியோகஸ்தர்களுக்கு

கோரிக்கைகளை மேலதிகாரிகள் சற்று தாமதமாகவே பரிசீலிப்பார்கள். இதனால் கோபமடையாமல் பொறுமை காக்கவும். முடிவு உங்களுக்கு சாதகமாகவே அமையும். மற்றபடி உங்கள் திட்டங்களை நன்றாக முடிப்பதில் கவனமாக இருப்பீர்கள். அலுவலக ரீதியான பயணங்களில் உடனடியாக நன்மைகளை எதிர்பார்க்க முடியாது.

வியாபாரிகளுக்கு

கொடுக்கல் வாங்கல் சிறப்பாக முடிந்தாலும் பெரிய லாபம் என்று எதுவும் ஏற்படாது. அதனால் கூட்டாளிகளுடன் சேராமல் உங்கள் காரியங்களை தனித்துச் செய்யவும். புதியவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளவும். அரசு வழிகளில் கெடுபிடிகள் ஏற்படலாம்.

விவசாயிகளுக்கு

திறமைகள் வீண் போகாது. விளைச்சலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புழு, பூச்சிகளால் பயிர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும். மற்றபடி சக விவசாயிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்தவர்களால் பெரிய தொல்லைகள் ஏற்படாது. இந்தக் காலகட்டத்தில் உபரி வருமானத்தில் கவனம் செலுத்துங்கள்.

அரசியல்வாதிகளுக்கு

கட்சி மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. மற்றவர்களுக்கு முன் ஜாமீன் கொடுக்க வேண்டாம். மற்றபடி உங்களின் கொள்கைகளில் உறுதியாக இருப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு

தேவையான வருமானத்தைக் காண்பீர்கள். வெளியூரில் நிகழ்ச்சிகளை நடத்திப் புகழ் பெறுவீர்கள். உங்களின் செயல்களில் சிறு தடுமாற்றங்கள் ஏற்படலாம். சிறிய தடைகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்மணிகளுக்கு

கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். ஆனாலும் குடும்பத்தில் உங்களின் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செயல்படுவீர்கள். குடும்ப வருமானத்தைப் பெருக்க சுய தொழில்களில் ஈடுபடுவீர்கள்.

மாணவமணிகளுக்கு

நன்கு உழைத்துப் படித்தால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். உங்களின் உடல்நலம் சீராகவே இருக்கும். வெளிவிளையாட்டுகளிலும் உடற்பயிற்சியிலும் தவறாமல் ஈடுபடவும்.

உத்திராடம் - 2, 3, 4

கலைத்துறையினருக்கு நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகளும் பெருகிடவும் வாய்ப்பான நாளிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.

திருவோணம்

தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும்.

அவிட்டம் - 1, 2

சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும்.

பரிகாரம்

சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com