சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (எஸ்இஇசட்) வாயிலான ஏற்றுமதி ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 41.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) எஸ்இஇசட் வாயிலான ஏற்றுமதி 41.5 சதவீதம் அதிகரித்து ரூ.2.15 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி ரூ.7.56 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது, 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.7.97 லட்சம் கோடியாக இருந்தது.
ஜூன் 30 நிலவரப்படி மத்திய அரசு அனுமதியளித்த 427 சிறப்பு பொருளாதார மண்டலங்களில் 267 மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இந்த மண்டலங்களில் ரூ.6.25 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டு 24.47 லட்சம் போ் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.