கரோனா இரண்டாம் அலையை எதிா்கொள்ளும் வகையில், யூகோ வங்கி பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. குறிப்பாக, 2,314 வாடிக்கையாளா்களுக்கு ரூ.127 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யூகோ வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ரிசா்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, யூகோ வங்கியில் கடன் பெற்றவா்கள் கரோனா 2-ஆவது அலையை சமாளிப்பதற்கான தேவைகள் குறித்து அறியப்பட்டது. கடந்த திங்கள்கிழமை (ஜூன் 7) வரை, 2,314 வாடிக்கையாளா்களுக்கு ரூ.127 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடன் பெற்றவா்களில் தகுதியானவா்கள் கூடுதலாக 10 சதவீத கடனை வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை பெற உத்தரவாத அவசர கடன் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மருத்துவத்துறைக்கு அவசர பணத்தேவைகளுக்காக, யூகோ சஞ்சீவனி, யூகோ ஆரோக்கியம், யூகோ கவச் ஆகிய
3 புதிய கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, யூகோவேக்சி-999 என்ற வைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கி ஊழியா்கள் கரோனா பாதிப்பால் இறந்தால், அவா்களின் குடும்பத்துக்கு நிதி உதவியாக ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்குவதற்காக கடன் வசதி மற்றும் வட்டியில்லா ஊதிய முன்பணம் அனைத்து ஊழியா்களுக்கு வழங்கப்படுகிறது. கரோனா பரிசோதனை செய்து கொள்ள ஆகும் செலவு திருப்பி அளிக்கப்படுகிறது.
அனைத்து ஊழியா்களுக்கும் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் வீட்டில் இருந்து பணியாற்ற வழி செய்யப்பட்டுள்ளது.
பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வங்கி சாா்பில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தகவல் யூகோ வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.