இப்போது தெலுங்கு திரைப்படத் துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் ஆதித்யராம். ரியல் எஸ்டேட் துறையிலும் "ஆதித்யராம் குரூப்' என்றால் பிரபலம்.
அப்படிப்பட்டவர், "ஆதித்யராம் மூவிஸ்' என்ற பேனரில் நிறைய முன்னணி இயக்குனர்களை, நடிகர்களை வைத்து ஒரே நேரத்தில் பத்து மெகா பட்ஜெட் படங்களை தயாரிக்க திட்டமிட்டு, ஒரே நாளில் அந்த பத்துப் படங்களின் தொடக்க விழாவையும் நடித்தி ஆந்திர திரையுலகை மட்டுமல்லாமல் ஆந்திர தேசத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இவர் இதற்கு முன்னதாக ஜெகபதிபாபு, ராஜேந்திர பிரசாத், சங்கவி, ஊர்வசி, மந்த்ரா, சோனாலி ஜோஷி ஆகியோர் நடித்த "சந்தடி சந்தடி' என்ற படத்தையும், வேணு, ஜெகபதி பாபு, நிகிதா, சங்கீதா, ரம்யா கிருஷ்ணன் நடித்த "குஷி குஷி', அர்ஜுன், ஜெகபதிபாபு, பூமிகா, அனுஷ்கா நடித்த "சுவாகதம்' ஆகிய சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்துதான் இப்போது பூரிஜெகன்நாத், வி.வி.வினாயக், சீனுவைட்லா, சோட்டா கே. நாயுடு, பரசுராம் போன்ற முன்னணி இயக்குனர்களை வைத்து பத்து படங்களை தயாரிக்க களத்தில் இறங்கியுள்ளார் ஆதித்யராம். இவர்களில் புரிஜெகன்நாத் இயக்கும் படத்தில் பிரபாஷ், கங்கணா ஜோடியாக நடிக்கிறார்கள்.
ஆந்திராவில் மட்டுமல்லாது, தமிழ் நாட்டிலும் ரியல் எஸ்டேட் துறையில் பிரபலமானவர் இவர். "ஆதித்யராம் ஸ்டூடியோ' என்ற இவரது ஸ்டூடியோவில்தான் "தசாவதாரம்' படத்தில் இடம் பெறும், "கல்லை மட்டும் கண்டால்...' என்ற பாடல் காட்சியும், சுனாமி காட்சியும் படமாக்கப்பட்டது. அத்துடன் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் "ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் படப்பிடிப்பும் இங்கு நடைபெற்றுள்ளது.
ஆந்திராவில் ஒரே நேரத்தில் பத்து படங்களை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியது போலவே விரைவில் தமிழிலும் பல முன்னணி ஹீரோக்களை, இயக்குனர்களை வைத்து படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் ஆதித்யராம். இதற்காக இயக்குனர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் அவர்.