தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்புப் பரிசு வழங்கும் விழா நேற்று நடிகர் சங்க வளாகத்தில் அதன் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. அப்போது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் பேசியதாவது:
நான் இயக்குநராக இருந்தும் என்னை விழாவைச் சிறப்பிக்க அழைத்த நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு நன்றி. நேற்று என்னை தொலைப்பேசி மூலமாக தொடர்புகொண்டு, நீங்கள் விழாவைச் சிறப்பிக்க வரவேண்டும் என்று கூறினார். நாளை காலையில் நினைவுபடுத்துங்கள். கண்டிப்பாக வருகிறேன் என்று நான் கூறினேன். இன்று காலை தொலைப்பேசி மூலமாக என்னை மீண்டும் தொடர்புகொண்டு நினைவுபடுத்தினார் நாசர். விட்டால் என் வீட்டுக்கு காரை அனுப்பி என்னை அழைத்து வந்திருப்பார்.
அவர் மனத்தளவில் எப்போதும் நல்ல எண்ணங்களைக் கொண்டவர். எப்போதும் அவர் நல்லதே நினைப்பதால்தான் அவருக்கு எப்போதும் நல்ல பெயர் கிடைக்கிறது. இதுதான் அவரைப் பற்றி கிசுகிசு வராததற்கு முக்கிய காரணம். நடிகர் சங்கத் தலைவராக இருப்பதற்கு நாசருக்கு எல்லாத் தகுதியும் உள்ளது என்றார்.