பர்னிங் ஸ்டார் சம்பூர்னேஷ் 'பிக்பாஸ்' குறித்து என்ன சொல்கிறார்?

முதல் வாரத்தில் ஓட்டு அடிப்படையில் டான்ஸர் ஜோதி எலிமினேட் செய்யப்பட்டார். இரண்டாம் வாரத்தில்  தன்னைத் தானே எலிமினேட்  செய்து கொண்டவர்  பர்னிங் ஸ்டார் சம்பூர்னேஷ். 
பர்னிங் ஸ்டார் சம்பூர்னேஷ் 'பிக்பாஸ்' குறித்து என்ன சொல்கிறார்?

தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தெலுங்கில் நடிகர் ஜூனியர் என் டி ஆர் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழைப் போலவே தெலுங்கிலும் ஒளிபரப்பாக ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே பரபரப்பை கிளப்பி பார்வையாளர்களைத் தன்னிடத்தில் கண்டுண்டு கிடக்க வைப்பதில் பிக் பாஸுக்கு நிகர் வேறில்லை. தெலுங்கு பிக் பாஸின் முதல் வாரத்திலேயே குடிபோதைக்கு அடிமையான போட்டியாளர் ஒருவர் பிக் பாஸ் வீட்டில் அது கிடைக்காததால் சக போட்டியாளரின் கழுத்தைக் கடிப்பது மாதிரியான ஒரு நாடகத்தை நிஜமென நம்ப வைத்து டிஆர்பியில் பட்டையைக் கிளப்பினார் பிக் பாஸ். அடுத்தடுத்த வாரங்களில் சோடை போகவில்லை. முதல் வாரத்தில் ஓட்டு அடிப்படையில் டான்ஸர் ஜோதி எலிமினேட் செய்யப்பட்டார். இரண்டாம் வாரத்தில்  தன்னைத் தானே எலிமினேட்  செய்து கொண்டவர்  பர்னிங் ஸ்டார் சம்பூர்னேஷ். 

தமிழில் கூட சம்பூர்னேசை தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. சூர்யா நடித்த சிங்கம் திரைப்படத்துக்குப் போட்டியாக தெலுங்கில் செவிட்டில் அறைவது மாதிரியான பொளேர் காமெடியுடன் போலீஸ் ஸ்டோரி கதைகளாகத் தேடிப்பிடித்து தன் சொந்த தயாரிப்பில் திரைப்படங்கள் எடுத்து, அதில் தானே ஹீரோவாக நடித்து  அல்லு கிளப்பியவரே சம்பூர்னேஷ். சில வருடங்களுக்கு முன் இவரது டெர்ரர் காமெடித் திரைப்படங்களை லிஸ்ட் எடுத்து வெகு சிரத்தையுடன் கவர் ஸ்டோரி எல்லாம் செய்திருந்தது ஒரு வெகு ஜன தமிழ் வார இதழ். அத்தனைக்கு முக்கியத்துவமானவரா சம்பூர்னேஷ் என்றால்? அது அப்படி இல்லை... இங்கே பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு எத்தகைய முக்கியத்துவம் இருக்கிறதோ அதைக் காட்டிலும் அதிக அளவு முக்கியத்துவம் ஆந்திராவில் சம்பூர்னேஷுக்கு உண்டு என்றால் அது மிகையில்லை. மொத்தத்தில் அவரிருக்கும் இடத்தில் காமெடிக்குப் பஞ்சமில்லை என்பதால் ஆந்திரவாலாக்கள் அவரது திரைப்படங்களைச் சகித்துக் கொள்கிறார்கள். சதா சர்வ காலமும் ஏடாகூடமாக ஏதாவது செய்து செண்டர் ஆஃப் அட்ராக்‌ஷனாக முயற்சிக்கும் அத்தகைய நபர்கள் கிடைத்தால் விடுவாரா பிக்பாஸ்? அப்படித்தான் பிக் பாஸுக்குள் வந்தார் சம்பூர்னேஷ்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளில் இருந்தே ரிசர்வ்டாக இருந்த சம்பூர்னேஷ், இரண்டாவது வாரமே கம்பி நீட்டுவார் என்று அக்கடபூமி எதிர்பார்த்திருக்காது. ஆனால் சம்பூர்னேஷ் தமிழ் பிக்பாஸ் பரணியை விஞ்சி விட்டார். பரணியாவது பிக்பாஸ் வீட்டின் சக போட்டியாளர்கள் தன்னை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தனிமைப் படுத்தி அபாண்டமாகப் பழி சொல்கிறார்கள் என்ற மன வருத்தத்தில் சுவரேறிக் குதிக்க முயற்சித்து அதனால் போட்டியிலிருந்து வெளியேற்றப் பட்டார். ஆனால் சம்பூர்னேஷ் அப்படி எதுவும் செய்யவில்லை. ஒரே ஒரு சொல் தான். இங்கிருந்து வெளியேற்றப் படாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஒரேயடியாக பிக் பாஸையே மிரட்டு மிரட்டென்று மிரட்டி போட்டியிலிருந்து ஜூட் விட்டு விட்டார்.

வெளியில் வந்தவர் சொன்னது இதைத் தான்...

“கிராமத்தில் பிறந்து வளர்ந்தவனான என்னால் அந்த வீட்டில் நிம்மதியாக மூச்சு கூட விடமுடியவில்லை. எனக்கு அங்கே ஒவ்வொரு நொடியும் மூச்சு முட்டியது. எங்கே இனியும் அங்கேயே இருந்தால் செத்து விடுவேனோ என்று பயம் வந்ததால் உடனடியாக அங்கிருந்து வெளியேற நினைத்தேன். அதற்கு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் அப்படிச் செய்தேன். பிக் பாஸ் போட்டியாளர்களுடன் எனக்கு எந்த விதமான தனிப்பட்ட பகையும் இல்லை. நான் பிக் பாஸிலிருந்து வெளியேறியதைக் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கும் மீம்ஸ்கள் மற்றும் ட்ரால்களால் தனக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை. அவர்கள் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. விரைவில் பழைய சம்பூர்னேஷாக நான் பட்டையைக் கிளப்புவேன்” என கூறி இருக்கிறார் சம்பூர்னேஷ். அதுமட்டுமல்ல பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னைப் புரிந்து கொண்ட ஒரே நபர் என்றால் அது ஜூனியர் என் டி ஆர் மட்டும் தான். அவருக்கு மட்டுமே எனது கஷ்டங்கள் புரிந்திருந்தன.  அவர் நிஜமாகவே ஒரு ரியல் ஹீரோவாகவே என் விஷயத்தில் நடந்து கொண்டார் என்றும் சம்பூர்னேஷ் குறிப்பிட்டுள்ளார்.

பார்னிங் ஸ்டார் சம்பூர்னேஷ் ஹிருதய கிளேஸம் தெலுங்குத் திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அவரது திரைப்படங்களில் இருந்த அதீத காமெடியில் ஈர்க்கப் பட்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி அந்தப் படத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் படம் நன்றாக இருக்கிறது எனப் பகிர உடனே ஆந்திரா முழுதும் பற்றிக் கொண்டது பர்னிங் ஸ்டார் சம்பூர்னேஷ் ஃபீவர். சாம்பிளுக்கு இந்த வீடியோவில் நீங்களும் கொஞ்சம் பார்க்கலாம்..

இப்படி பிக்பாஸ் போட்டியிலிருந்து தன்னைத் தானே எலிமினேட் செய்து கொண்டதில் சம்பூர்னேஷுக்கு 16 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டுள்ளதாக ஆந்திரப் பட்சிகள் கூவிக் கொண்டிருக்கின்றன. அது நிஜமா, வதந்தியா என்பது பிக் பாஸுக்கே வெளிச்சம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com