பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓவியா வெல்வார்: நடிகர் பரணி கணிப்பு!

ஓவியாவுக்கு சமூகவலைத்தளங்களில் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் பரணியும் ஓவியாவுக்கு ஆதரவாகப் பேசி...
பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓவியா வெல்வார்: நடிகர் பரணி கணிப்பு!
Published on
Updated on
2 min read

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பிக் பாஸ் அற்புதமாகத் தொடங்கியுள்ளது. 3 கோடியே 60 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. நன்றி மக்களே என்று விஜய் டிவி சமீபத்தில் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் பரணி வெளியேற்றப்பட்டார். குழுவில் உள்ள அனைவரும் தன்னை ஒதுக்குவதால் பிக் பாஸை விட்டு வெளியேற பரணி முடிவு செய்தார். இதனால் அவர் பிக் பாஸ் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதில் ஏதும் வராததால் அவர் சுவரைத் தாண்டி வெளியேற முடிவெடுத்தார்.

தன்னை வெளியேற்றாவிட்டால் தற்கொலை செய்துவிடுவேன் என்றும் கேமரா முன்பு மிரட்டினார். ஆனால் பதில் ஏதும் வராததால் மிகவும் கஷ்டப்பட்டுப் பல தடைகளைத் தாண்டி அரங்கை விட்டு வெளியேற முயற்சி செய்தார். அதாவது சுவரேறித் தாண்ட முயற்சி செய்தார். மிகவும் உயரமான சுவர் என்பதால் அவரால் அவ்வளவு எளிதில் தாண்டமுடியவில்லை. இதனால் பார்வையாளர்களிடையே பதைபதைப்பு ஏற்பட்டது.

பிக் பாஸ் அரங்கில் இருந்த மற்றவர்கள் யாரும் இதைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. டிஆர்பி ரேட்டிங்குக்காக நாடகம் ஆடுகிறார் என்று பரணியை விமரிசனம் செய்து அதே இடத்தில் நகராமல் அமர்ந்திருந்தார்கள். இதனால் நிகழ்ச்சியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பரணியின் இந்த விபரீதமுயற்சியால் நல்லவேளையாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. இதையடுத்து விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக பரணி, பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பரணியை கமல்ஹாசன் நேற்று பேட்டி கண்டார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் வெல்வார் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பரணி, நான் வெளியேறியபோது, பை பரணி என்று சொன்னவரே பிக் பாஸ் வெற்றியாளர் என்றார். இதன் அடிப்படையில் அவர் ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராகக் கணித்துள்ளார். 

இதையடுத்து சமூகவலைத்தளத்தில் பரணிக்கு அதிகப் பாராட்டுகள் குவிந்துள்ளன. ஏற்கெனவே ஓவியாவுக்கு சமூகவலைத்தளங்களில் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் பரணியும் ஓவியாவுக்கு ஆதரவாகப் பேசியதால் அவரைப் பாராட்டி மீம்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com