விஸ்வரூபம் 2 படத்துக்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கமல் ஹாசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், மர்மயோகி என்ற படத்தைத் தயாரிப்பது தொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ரூ.100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டு, தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடியும், படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்க கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடியும் வழங்கப்பட்டது. ஆனால் அவர் மர்மயோகி படத்தை தயாரிக்காமல் உன்னைப் போல்' ஒருவன் படத்தை எடுத்தார்.
இதனையடுத்து மர்ம யோகி படத்தின் தயாரிப்புப் பணிகளுக்காக கொடுத்த ரூ.6.90 கோடியை திரும்ப தரக் கோரி கடந்த 2016 -ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் -2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 -ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
மர்மயோகி படத்துக்காக அவருக்கு கொடுத்த ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியாக வழங்க கமல்ஹாசனுக்கு உத்தரவிடவும், அதுவரை விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும்' என்றும் கோரப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் 2 படத்துக்குத் தடை கோரி தொடரப்பட்ட இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வரும் 6-ம் தேதிக்குள் கமல் மற்றும் ஆஸ்கர் நிறுவனம் ஆகிய இரு தரப்பும் இதற்குப் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.