விஜய்காந்த் மகன் படம் நாளை இணையத்தில் வெளியாகாது: திடீர் அறிவிப்பு!
திரையில் வெளியாகிற ஒரு படம் அதே நாளில் இணையத்திலும் வெளியாவது தமிழ் சினிமாவில் சாத்தியமேயில்லை போல.
விஜய்காந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மதுர வீரன் படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் நாளையே இந்தப் படம் டெண்ட்கொட்டா என்கிற இணையத்திலும் வெளியாகவிருந்தது. இந்தப் படத்தை அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள மக்கள் இணையத்திலும் பணம் கட்டி பார்க்கும் வசதியை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த முயற்சியைப் பலரும் பாராட்டினார்கள். தமிழ் சினிமாவில் புதிய மறுமலர்சிக்கு இது தொடக்கமாக இருக்கும் என அறியப்பட்டது.
இந்நிலையில் மதுரவீரன் படம் இணையத்தில் வெளியாகாது என டெண்ட்கொட்டா இணையத்தளம் திடீரென அறிவித்துள்ளது. திரையரங்கில் வெளியாகும் ஒரு படத்தை அதே நாளில் இணையத்திலும் வெளியிடுவதில் சிரமங்கள் உள்ளதாலும், தவிர்க்கமுடியாத காரணங்களாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
திரையரங்கிலும் இணையத்திலும் ஒரே சமயத்தில் படம் வெளியாவதற்குத் திரையரங்குகளின் தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படம் வெளியான பிறகு அமேஸான் பிரைமில் படங்கள் வெளியாவதற்கே திரையரங்கு அதிபர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். இந்நிலையில் படம் வெளியான அன்றே இணையத்திலும் வெளியாகவிருந்த மதுரவீரன் படம் தற்போது திரையரங்குகளில் மட்டும் நாளை வெளியாகவுள்ளது.
சண்முகபாண்டியன், சமுத்திரக்கனி, மீனாட்சி நடிப்பில் பிஜி முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மதுர வீரன். இசை - சந்தோஷ் தயாநிதி.