யோகி பாபுவின் காண்டிராக்டர் நேசமணி படத்தில் டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி பகுதி தமிழில் அவர் பேசுவது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டாலும், யூடியூப் மூலம் மக்களை மகிழ்வித்து வருகிறார்.
கடந்த சில வாரத்துக்கு முன் பிக்பாஸ் வீட்டுக்கு முன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். இதனையடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் பரவியது. சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக பரவிய தகவலை முற்றிலும் மறுத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தனக்கு அழைப்பு வரவில்லை என்றும் தன்னால் தன் குழந்தைகளை பார்க்காமல் இருக்க முடியாது என்பதால் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்றும் உறுதியாக தெரிவித்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது யோகி பாபு - ஓவியா நடித்து வரும் காண்டிராக்டர் நேசமணி படத்தில் ஜி.பி.முத்து ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்வதீம் இயக்குகிறார்.
ஃபிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் வேடத்தின் பெயர் தான் காண்டிராக்டர் நேசமணி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு சேவ் காண்டிராக்டர் நேசமணி என்ற ஹேஷ்டேக் காரணமேயின்றி ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டானது. யார் அந்த நேசமணி என்று வட இந்தியர்கள் குழம்பினர். அப்பொழுதே இந்தப் பெயரில் படம் உருவாகும் என்று பேசப்பட்டது.
இதையும் படிக்க | எஸ்.பி.பி.யுடன் 52 நாள்கள்: மருத்துவரின் உருக்கமான பதிவு
முன்னதாக தலைநகரம் படத்தில் வடிவேலுவின் நாய் சேகர் என்ற வேடத்தை நினைவுபடுத்தும் விதமாக நாய் சேகர் என்ற தலைப்பில் சதீஷ் கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்து வந்தார். இதன் ஒரு பகுதியாக நடிகர் வடிவேலும் நாய் சேகர் என்ற தலைப்பை அறிவிக்க, பெரும் சர்ச்சை உருவானது.
முதலில் சதீஷ் படம் துவங்கப்பட்டதால், நடிகர் வடிவேலுவால் நாய் சேகர் தலைப்பை பயன்படுத்த முடியாத சூழல் உருவானது. எல்லோரும் வடிவேலுவின் வேடம் மற்றும் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு படத் தலைப்புகளை வைத்துக்கொண்டிருக்க, அவரால் பயன்படுத்த முடியாதது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.