நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் அக்-8 அன்று வெளியாகும் ‘ஹவுஸ் அஃப் சீக்ரட்ஸ்-தி புராரி டெத்ஸ்’ ஆவணத் தொடருக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு தில்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கில் தொங்கி உயிரிழந்தனர். என்ன காரணம் என்றே தெரியாத இத்தற்கொலைச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.
பின் ‘புராரி வழக்கு’ என பதிவு செய்து தில்லி காவல்துறையினர் இது தற்கொலையா இல்லை கொலையா என்கிற நோக்கில் இந்த வழக்கை விசாரித்தனர். இருப்பினும் இச்சம்பவம் எந்தக் காரணத்திற்காக நடந்தது என இன்று வரை மர்மமாகவே இருக்கிறது.
இந்நிலையில் நெட்பிளிக்ஸ் ‘ஹவுஸ் அஃப் சீக்ரட்ஸ்-தி புராரி டெத்ஸ்' என்கிற தலைப்பில் அந்தக் குடும்பத்தின் தற்கொலை நிகழ்வை ஆவணப்படுத்தும் தொடரை தயாரித்திருக்கிறது.
‘ஷப்த்’, ’பார்ச்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய லீனா யாதவ் மற்றும் அனுபவம் சோப்ரா இயக்கியிருக்கும் இந்தத் ஆவணத் தொடருக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
மேலும் ‘இந்த ஆவணத் தொடர் புதுவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது’ எனத் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.
இத்தொடர் நாளை மறுநாள்(அக்-8) நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது